புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நிலையான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்களுடன் எவ்விதத்தில் போர் புரிகிறார்களோ, அவ்விதத்தில் நீங்களும் அவர்களுடன் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(9:36)
………….இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே திருப்திப்பட்டேன்………..(5:3)
இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், மற்றும் ரஜப் மாதங்களாகும். அந்நான்கு மாதங்களில் ஒன்றான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்து விட்டோம். ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளிலும், பத்தாம் நாளிலும் நோன்பு நோற்க நம்மை வலியுறுத்தினார்கள்.
ரமளானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்ததோடு, அதை வைக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளில் நோன்பு வைப்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்து நானே மிகப்பெரிய கடவுள் என்று கூறி பல அக்கிரமங்களை புரிந்த ஒரு கொடுங்கோல் அரசனான பிர்அவ்னைக் தண்ணீரில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் தான் ஆஷரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள்.
பிர்அவ்னின் கொடூர ஆட்சியில் பாதிக்கப்பட்ட நேரத்தில், மூஸா (அலை) என்ற இறைத்தூதரின் தலைமையில், எகிப்தை விட்டு வெளியேறுவதற்காக புறப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை, அல்லாஹ் தன் வல்லமையால் மிக அற்புதமாக தண்ணீரை பிளந்து காப்பாற்றிய ஒரு முக்கியமான சரித்திர நிகழ்வு முஹர்ரம் மாதத்தில் நடந்ததை நாம் யாரும் மறக்க முடியாது.
ஒரு முஸ்லீம் என்றுமே மறக்க கூடாத அந்த அற்புத நிகழ்வை, மறைப்பதற்காக யூதர்களின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டது தான், தற்போது கர்பலாவின் பெயரால் படுகளம் என்ற பெயரில் நடைபெற்றுவரும் படு கேவலமான இந்த முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்
கர்பலா என்ற போரில் நடந்த துயரச்சம்பவங்களை கூறி தற்போது புனிதமான முஹர்ரம் மாதத்தை கேவலப்படுத்தும் விதமாக நமதூர் ஏர்வாடியிலும் ஒவ்வொரு வருட முஹர்ரம் மாதத்திலும் இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்மந்தமில்லாத ஏராளமான அனாச்சாரங்கள் முஸ்லீம் பெயர் தாங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது.
சூரியனை மறைக்கும் பூரண கிரகணத்தைப் போல ஆஷுரா தினத்தில் நடைபெற்ற அல்லாஹ்வின் வல்லமை செயலை, கர்பலாவும், அதையொட்டிஷியாக்கள் கிளப்பி விட்ட மூடப் பழக்கங்களும் மறைத்து விட்டன. ஆஷுராதினத்தை மையமாக வைத்து நடக்கும் மூடத்தனமான செயல்பாடுகளையும், இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களையும் இப்போது பார்ப்போம்.
சோக நாளாக்கி மாற்றப்பட்ட ஆஷுரா
ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒரு போதும் ஆகி விடாது. ஏனென்றால் இரண்டாம் கலீபாவாகிய உமர் (ரளி) அவர்களும், மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரளி) அவர்களும் இஸ்லாத்தின் எதிரிகளால் கொல்லப்பட்டனர் என்பதை அனைவரும் அறிந்ததே. கலீபாக்கள் கொல்லப்பட்ட அந்த துயரமான நாட்களை யாரும் துக்க தினமாக பார்ப்பதில்லை.
அதே சமயம் நான்காம் கலீபாவாக இருந்த அலி (ரளி) அவர்களின் மகன் ஹுசைன் (ரளி) கொல்லப்பபட்டதாக கூறி துக்க தினம் கொண்டாடுவது எப்படி இஸ்லாத்தில் நுழைந்தது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்கு ஷியாக்களின் திட்டமிட்ட சதிதான் காரணம் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் திங்கள்கிழமை தான். அன்றைய தினத்தை யாரும் துக்க தினமாக கொண்டாடுவது கிடையாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்…… (நூல்: புகாரி 1387)
ஹுசைன் (ரளி) அவர்கள் கொல்லப்பட்டதை துக்க தினமாக கொண்டாடுபவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காகவோ, உமர்(ரளி), உஸ்மான் (ரளி) போன்ற முக்கியமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டதற்காகவோ ஏன் துக்க தினம் கொண்டாடுவதில்லை.?
ஷியாக்கள் என்போர் யார்?
நாம் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூதர்(நபி)ஆவதற்கு தகுதியில்லாதவர், உண்மையில் தூதராக வேண்டியது அலி (ரளி) அவர்கள் தான் என நம்பி உலகத்தில் பிரச்சாரம் செய்து வருபவர்கள். அதுமட்டுமல்லாமல், அபூபக்கர் (ரளி), உமர் (ரளி), உஸ்மான் (ரளி), நபி(ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரளி) போன்றோர்களை சபிக்கக் கூடியவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
இன்னும் பல மோசமான நம்பிக்கைகளும் வைத்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தான் இந்த ஷியாக்கள். இதிலிருந்து ஷியாக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்த்தெறியக் கூடியவர்கள் என்பதை நாம் புரியலாம். மேலும் இவர்கள் நம்பும் பல கொள்கைகள் யூதர்களிடமிருந்து நடைமுறைப்படுத்தியதாகும். இதன் மூலம் முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்ஷியாக்களால், முஸ்லீம் சமுதாயத்தில் ஊடுருவியது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
துக்கம் அனுஷ்டிப்பது எவ்வாறு?
இஸ்லாமிய கொள்கை அடிப்படையில், யார் மரணித்தாலும், கொல்லப்பட்டாலும், அந்த நாள் மீண்டும் வரும் போது அந்த தினத்தை துக்க தினமாக கொண்டாடுவது என்பது கிடையாது. அப்படி கொண்டாட நினைத்தால் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் துக்கத்திலேயே கழிக்க வேண்டியதாக இருக்கும்.
இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம்……….. என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரளி) நூல்: புகாரி 313)
ஹுசைன் (ரளி) கொல்லப்பட்ட பின் மூன்று நாட்களுடன் அந்தச் சோகம் முடிந்து விடுகின்றது. இதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டு, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லி தங்களுடைய வாழ்நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டனர். ஹுசைன் (ரளி)யின் குடும்பத்தார் ஒவ்வோர் ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை சோக தினமாக அனுஷ்டிக்கவில்லை, என்றாலும் ஷியாக்கள் முஹர்ரம் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் படுகளம் என்னும் கொண்டாட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்து, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை சிதைத்து வருகின்றனர்.
முஹர்ரத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள்
ஷியாக்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படுகளத்தில் நடக்கும் தற்போதைய அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்ப்போம்.
பஞ்சா எடுத்தல், ஏழாம் பஞ்சா, தாம்பத்தியத்திற்குத் தடை, பத்தாம் பஞ்சா, பத்தாம் நாள் சந்தனக் கூடு, போதையில் சிலம்பாட்டம், மது போதையில் புலி வேஷம் போடுதல், நோய் நிவாரணத்தை கேட்டு தீக் கிணற்றில் உப்பு மிளகு போடுதல், தீமிதி, தீக்குளிப்பு, தீச்சட்டி தூக்குதல், மாவிளக்கு ஏந்துதல், அல்லாஹ் நமக்கு பரிசுத்தமாக்கி தந்த மீன் உணவை தடுத்து ஹராமாக்குவது, பெண்களின் கவர்ச்சி நடனம், ஆடல் பாடல்கள், ஏர்வாடியிலும் வெளியூரிலும் வசிக்கும் கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் அன்னியர்கள் முன் தன் அழகு அலங்காரங்களையும் மறைக்காமல் வெளிகாட்டி செல்வது, குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை, அதுமட்டுமில்லாமல் இவ்வருட சிறப்பம்சமாக குலுக்கல் பரிசு என்ற பெயரில் சூதாட்டம் போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து அநியாயமான செயல்களையும், முஸ்லீம் என்று கூறி செய்து வருகின்றனர். இஸ்லாத்திற்கும் இந்த அனாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை சற்று நிதானமாக சிந்திப்பீர்களா?
மேலும் நபியின் நடைமுறை வாழ்க்கையில் அறியாமைக்கால நேர்ச்சைகளை தடைசெய்ததை கீழ்கண்ட சம்பவங்களின் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.
ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். (கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரளி) நூல்: புகாரி 1865)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் நேர்ச்சை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால், அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரளி) நூல்: புகாரி 6696)
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை மறந்துவிட்டு, கற்பனையாக ஒன்றை ஏற்படுத்தி, அதை பஞ்சா என்று பெயரும் கூறி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமான நேர்ச்சையை இந்த சந்தன கூடு சாவடிக்குள்ளும், கொடிமரத்திற்கும் செய்து வரும் இணைவைப்பு என்னும் மாபாதகம் நடப்பதை நாம் அனைவரும் தடுக்க வேண்டாமா? நாம் தடுக்க வேண்டும் என்பதை கீழ்வரும் நபிவழிச் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். (அந்த மரத்தை) தாத்து அன்வாத்’ என்று சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்.! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரளி) நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)
அந்த வார்த்தை தற்போது இந்த படுகளம் மூலம் மெய்படுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். எதை எதை எல்லாம் நபியவர்கள் தடுத்தார்களோ அவை அனைத்தும் ஒரே இடத்தில் நடத்தப்படுவது தான் இந்த படுகளம் என்னும் முஹர்ரம் மாத கொண்டாட்டம். எனவே யூத ஷியாக்களின் கூட்டுச் சதியால், உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை கீழான நிலையில் மக்களுக்கு காட்டுகின்றனர். இதனால் இஸ்லாத்தை விரும்புபவர்கள், நம்மிடம் உள்ள மூடப்பழக்கங்கள் இங்கேயும் இருக்கிறது என நினைத்து இஸ்லாத்தினுள் நுழைய தயங்குகின்றனர்.
இஸ்லாமிய கொள்கைகளை மேலோங்க செய்வதற்காக தியாகம் செய்ய வேண்டிய இளைய சமுதாயம் தான், இது போன்ற அனாச்சாரங்களை தடுக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாமான செயலாகும்? நாம் செய்யும் தியாகம் தான் நமக்கு பின்னுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை நெருக்கடியில்லாமல் வாழ வைக்கும் என்பதை நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தெளிவான அடிப்படையில தருவதே இஸ்லாத்தின் உன்னத நோக்கமாகும். எனவே இந்த தூய இஸ்லாம், இது போன்ற ஷியாக்களின் சதித்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட படுகளம் என்ற அனாச்சாரத்தை எப்படி ஆதரிக்கும் என்பதை ஒரு கணம் சிந்திக்கவும்.
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்.
உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர பூமியில் நாசமுண்டாக்குவதை தடுக்கக் கூடிய நல்லோர்கள் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் முழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். இன்னும் ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். (அல்குர்ஆன் 11: 116-117)
எனவே அல்லாஹ்வின் அழிவும் வேதனையும் நம்மையும், நமது சந்ததிகளையும் அடையும் முன்பே நம்மை தற்காத்துக்கொள்ள, இந்த படுகளத்தை தடுத்தே ஆகவேண்டும் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
எனவே நாம் நம்முடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பைசா கூட இந்த அனாச்சாரங்களுக்கு செலவு செய்யவோ, அல்லது வேடிக்கை பார்க்கவோ, வேறு எவ்வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதோ இஸ்லாமிய அடிப்படையில் அல்லாஹ்விடம் நமக்கு வேதனையையும், தண்டணையையும் ஏற்படுத்திவிடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
நமது கடமைகள்
இஸ்லாத்தை பாதுகாப்பது ஒரு முஃமீனுக்கு முக்கிய கடமையாகும். இஸ்லாத்தை பாதுகாப்பது என்றால், குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும், கூட்டாமல் குறைக்காமல் செய்து வருவது தான். அப்படி யாராவது கூட்டுவதோ குறைப்பதோ செய்யும் பொழுது அதை தட்டிக் கேட்க வேண்டிய, தடுத்து நிறுத்த வேண்டிய, அதை மனதால் வெறுக்க வேண்டிய கடமை முஸ்லீம்கள் அனைவருக்கும் உண்டு.
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)
எனவே மேற்குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில், ஜமாஅத் நிர்வாகிகள் நன்மையை ஏவி தீமையை தடுப்பது கட்டாய கடமையாக உள்ளது. எனவே ஜமாஅத்தின் கீழ் வாழும் முஸ்லீம்களை, படுகளத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு தரும்படி உத்தரவிடுவதும், அதை தடுப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதும் ஜமாஅத் நிர்வாகிகளின் முக்கிய கடமையாகும்.
ஜமாஅத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளில் உள்ளவர்கள் யாராவது, இதை தடுக்க முன்வராத நிலையில், முஸ்லீமாக இருக்க கூடிய ஒவ்வொருவரும் நீங்கள் இதை ஏன் தடுக்கவில்லை என்று அந்த ஜமாஅத்தின் நிர்வாகிகளிடம் கேட்பது ஒவ்வொரு முஹல்லாவில் வசிக்கும் முஸ்லீம்களின் கடமையாகும். இக்கடமை நாம் செய்யாவிட்டால், நமக்கும் நமது ஊருக்கும், அல்லாஹ்வின் கடுமையான தண்டணை வருவதை நாம் பயந்து கொள்ளவேண்டும். இப்படிபயந்து கொள்ள இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தவர்களுடைய நிலைமையை நமக்கு போதுமான சான்றாக உள்ளது.
எனவே இதை படிக்கும் நீங்கள், உங்கள் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளிடம், ஏன் படுகளத்தை இதுநாள் வரை தடுக்காமல் இருந்தீர்கள்? இனிமேலாவது இதை தடுப்பீர்களா? இதை தடுக்க நீங்கள் என்றுதான் முயற்சி எடுப்பீர்கள்? ஏன் இதை தடுக்க முயற்சி எடுக்கக் கூடாது? அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளின் நிர்வாக பொறுப்பேற்று நடத்த கூடிய நீங்கள், இந்த அனாச்சாரங்களை தடுக்காமல் எப்படி பொறுமையாக இருக்கிறீர்கள்? மக்களே இனிமேலாவது நீங்கள் ஜமாஅத் நிர்வாகத்திடம் இதை கேட்பீர்களா?
இளைஞர்களே! உங்கள் முஹல்லா தலைவர்களை சந்தித்து இந்த அனாச்சாரங்களை தடுக்கும் படி என்றாவது முயற்சி செய்தீர்களா? செய்யவேண்டாமா? சிந்திக்கவும். பெண்களே! நீங்கள் இந்த அனாச்சாரங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதோடு, உங்கள் வீட்டு ஆண்மக்களை படுகளத்தை தடுத்து நிறுத்த, வீதிக்கு சென்று போராடுங்கள் என்று கூறி என்றாவது அனுப்பியுள்ளீர்களா? சிந்திக்கவும். எனவே மேற்கூறிய அனைத்தையும் சிந்தித்து தெளிவு பெற்று அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்வாருங்கள்.                                      எழுதியவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001