தண்ணீர்! தண்ணீர்!


 


உலக வாழ்வாதாரத்திற்கான அடிப்படை அலகு தண்ணீர். மக்கள் தொகை பெருக பெருக தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகி கொண்டே இருக்கிறது. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்கானது என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 2050-ல் உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய அளவில் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
அங்கு உள்ள நீர் நிலைகளில் மக்கள் ஒன்று சேரக்கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை. இதனைத் தடுக்க அரசு துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீண்ட கால அடிப்படையிலான துரித நடவடிக்கைகள் மட்டுமே இதற்கான தீர்வை தரக்கூடியதாக இருக்கும். இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய சில தகவல்கள்….
நிலத்தடி நீர் மட்ட அளவில் அபாயகரத்தில் இருக்கும் இந்திய மாநிலங்கள்
# பஞ்சாப்  # ராஜஸ்தான் # ஹரியாணா# டெல்லி# கர்நாடகா# தமிழ்நாடு# உத்தரப்பிரதேசம்# ஆந்திரப்பிரதேசம்# தெலங்கானா
சர்வதேச அளவில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத பிற நாடுகளின் பட்டியல்...
# இந்தியா # சீனா # நைஜிரீயா # எத்தியோப்பியா  #காங்கோ
>> உலக மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு உள்ள தண்ணீர் 4% மட்டுமே.
>> பூமியில் உள்ள மொத்த 71% நீர்பரப்பில் 2.5% மட்டுமே தூய்மையான நீர்.
>> இந்தியர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 17% தண்ணீருக்காக செலவிடுகிறார்கள்
>> இந்தியாவின் மொத்த ஆற்று நீரில் 36% தண்ணீர் கங்கை நதி மூலமாக பெறப்படுகிறது.
> தற்போது கங்கை நதி முழுவதும் மாசுபட்டுள்ளது. இந்த மாசுபாட்டை குறைப்பதற்காக மத்திய அரசு நமாமி கங்கை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
>> 90% நதி நீர் மோசமான சூழலியல் கொள்கைகள் மூலமாகதான் மாசடைகிறது.
>> இந்தியாவில் வருடத்திற்கு நீரினால் பரவக்கூடிய மலேரியா நோய் காரணமாக 1.4 லட்சம் சிறார்கள் இறக்கின்றனர்.
>> ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு 1123 பில்லியன் கியூபிக் மீட்டர். இதில் 690 பில்லியன் கியூபிக் மீட்டர் அல்லது 60% தண்ணீர் ஆறுகள் மற்றும் ஏரிகள் மூலமாக பெறப்படுகிறது. மீதமுள்ள 40% தண்ணீர் நிலத்தடி நீர் மூலமாக பெறப்படுகிறது.
>> 2025ம் ஆண்டு இந்தியாவில் 843 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 2050-ம் ஆண்டில் பற்றாக்குறையின் அளவு அதிகமாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
100% - ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டு விட்டது.
70% - தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் 70 சதவீத நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது.
95% - தற்போது தமிழ்நாட்டில் 95 சதவீத கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன.
32 - இந்தியாவில் 32 முக்கிய பெரிய நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க வழிகள்
# மழைநீரை சேமிப்பது
# கடல் நீரை குடிநீராக்குவது
# நதி நீரை மாசுபாடு இல்லாமல் பாதுகாப்பது

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை

உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் உங்களுக்கு மட்டும் சொந்தமானதா? நமக்குச் சொந்தமான இடத்தில் துளையிட்டு நாம் கட்டணம் செலுத்தும் மின்சாரம் நமது மோட்டரைக் கொண்டு நாம் சேமிக்கும் தண்ணீர் நம்முடைய நீர் என்று மட்டும் சொல்ல முடியுமா?

பூமியிலிருந்து எடுக்கும் ஒவ்வொரு துளி நீரும் அனைவருக்கும் பொது வானது. நாம் நீரை விரயமாக்கினால் அது பிறரையும் பாதிக்கும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தண்ணீருக்காக அலையாய் அலையும் மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்களது கஷ்டங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறோம். ஆனாலும் எத்தனையோ அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் காணப்படும் நீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் காட்சி தென்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அவசர அவசரமாக ஓடும் தினசரி நடவடிக்கைகளில் பலவற்றை எளிதாக மறந்துவிடுகிறோம். காலையில் குளியலறைக்குள் நுழைகிறோம். குழாயிலிருந்து புஸ்ஸென்ற சத்தம் மட்டுமே கேட்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்து தண்ணீருக்கான மோட்டரை இயக்கும் பொருட்டு அதன் சுவிட்சைப் போடுகிறோம். அப்படியே அனைத்து வேலைகளைத் தொடருகிறோம். ஆனால் போட்ட சுவிட்சை யார் அணைப்பது? அது குறித்த அக்கறையே கொள்வதில்லை. ஒருவேளை மோட்டர் சுவிட்சைப் போட்டது நினைவில் வந்தாலும் யாராவது அணைப்பார்கள் என்ற சோம்பேறித்தனமான எண்ணம் வந்துவிடுகிறது. விளைவு, கேட்பாரின்றி நிரம்பி வழிகிறது தண்ணீர்.

கோடை நெருங்குகிறது. நிலத்தடியில் மழைக்காலம் போன்று தாராளமாக நீர் கிடைக்காது. இது எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் அது நமது நினைவில் உறைப்பதில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் அனைவருமே தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் யாரோ ஒருவரது தவறால் அனைவருக்கும் கஷ்டம் வந்துசேரும். யார் மோட்டரைப் போட்டிருந்தாலும் உங்கள் கவனத்துக்கு வந்தால் நீர் நிரம்பி வழியும் முன்னர் மோட்டரை அணைத்துவிடுங்கள். தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துங்கள். நமது இருப்பு மிகவும் குறைவு என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகச் செலவிட்டால் சிரமங்களைக் குறைக்கலாம்.

பாத்திரங்களைக் கழுவும் தொட்டியில் போட்டுப் பாத்திரங்களைக் கழுவும்போது குழாயில் நீர் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா? சிறிது கவனமாக இருந்தால் பெருமளவில் நீரைச் சேமிக்கலாம். பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது செடிகளுக்கு மட்டும் நீரைத் தெளிக்கலாம். நிலத்துக்கெலாம் நீரைப் பாய்ச்சினால் அது வீண் தான்.

துணி துவைக்கும்போது பக்கெட் நிரம்பிய பின்னரே அலசுங்கள். குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டே துணிகளை அலசும்பொது நீர் வீணாவது தெரியவே தெரியாது. காய்கறிகளையும், பழங்களையும் கழுவ வேண்டுமானால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் இவற்றைப் போட்டுக் கழுவுங்கள். குழாயைத் திறந்துவைத்து இதே வேலையைப் பார்த்தால் தண்ணீர் அதிகம் செலவாகும்.வீட்டின் முன்பகுதிகளையும் நடைபாதைகளையும் கழுவி விடுவதற்கு முன்னர் அவற்றை துடப்பதால் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். முழுவதும் தண்ணீரால் செய்ய வேண்டுமானால் ஏராளமாய் தண்ணீர் செலவாகும். குளியலறையில் ஷவரைத் திறந்துவிட்டுக் குளிப்பதற்குப் பதில் வாளியில் தண்ணீரைப் பிடித்துவைத்து பின்னர் குளிக்கலாம். இப்படிப் பல வழிகளில் நீரைச் சேமித்தால் அது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001