பலதார மணம் - ஓர் அலசல்

பலதார மணம் - ஓர் அலசல்
இறைநேசன்


பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும்.

இருபாலருக்கும் பொதுவான பலதார மணத்தை பாலிகேமி (Polygamy) என்பார்கள். இந்த பாலிகேமி என்பது பால் வேற்றுமைகளின் அடிப்படையில் இரு வகைப்படும்.

1.
முதலாவது வகை - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது. இதனை பாலிஜினி (Polygyny) என்பார்கள். 

2.
இரண்டாவது வகை - ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வது. இதனை பாலியாண்டரி (Polyandry) என்பார்கள். 

இக்கட்டுரையின் கருவான முதலாவது வகை, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகப்படியாக நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வது குவாட்ரோஜினி (Quadrogyny) இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 

பெண்கள் பல ஆண்களைத் திருமணம் செய்ய இஸ்லாம் தடை செய்வது ஏன்?

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதிக்கும் இஸ்லாம், பெண்களுக்குத் தடை செய்வது ஏன்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. அக்கேள்விக்கு விடை காணும் முயற்சியின் சிந்தனையோட்டமே இக்கட்டுரை.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும், சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கமாகும். ஆணையும், பெண்ணையும் சமமாகவே படைத்த இறைவன், ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும், இயல்புகளையும் கொடுத்துள்ளான். உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமானவர்கள். சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும், பொறுப்புகளும் உள்ளன. ஆண்களும் பெண்களும் சமமானவர்களே (Equal) தவிர - அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான தன்மையுடையவர்கள் (Identical) அல்லர்.

ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகள் ஒரே தந்தைக்குத்தான் பிறந்தது என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயத்தில், ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எவ்விதச் சோதனையுமின்றி எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதானதாக இல்லை. வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் டி.என். பரிசோதனை செய்வதன் மூலம் அதனை அறிந்து கொள்ளலாம்.

ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளைச் செய்வது உடலியல் ரீதியாக ஆணுக்கு மிக எளிதாகும். பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் - தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஒரு பெண், மாதவிலக்காகும் கால கட்டங்களில் மனோ ரீதியாகவும் நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் ஏராளமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 

பல கணவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இத்தகைய பாலியல் நோய்கள் எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். இப்பிரச்சினை பல பெண்களை மணந்து கொள்ளும் ஓர் ஆணுக்கு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

ஓர் ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஒரே தந்தையான அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? 

உதாரணத்திற்கு, ஓர் ஆண் பத்து பெண்களுடன் ஓர் ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்தப் பத்து பெண்களும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்பிருக்கின்றது. அதே சமயத்தில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் பத்து குழந்தைகளைப் பெற முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. (இதனை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை என்பது வேறு விஷயம்.)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. இது போன்று இதுவரை அறியப் படாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். இது போன்ற காரணங்களினால்தான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய கணவனை மணவிலக்கு செய்த பின்னர் குறிப்பிட்ட தவணைக்குப் பிறகு வேறொரு ஆணை மணமுடிக்கவும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை. மேலும், கணவனில்லாத பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நான்கு பெண்கள் வரை திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பது ஏன்?

ஆண்கள் பலதார மணம் செய்வதைப் பற்றித் தர்க்க ரீதியான காரணங்களை முதலில் பார்த்து விட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்களுக்கு இஸ்லாம் எவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதையும் பார்ப்போம். 

உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்கத் தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்களுக்குப் பெண்களின் தேவையிருக்காது. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும்.

மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று . பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாகக் கலைக்கப்படுவதும் பிறந்து விட்ட குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுக்கொலை செய்து விடுவதுமே இதற்குக் காரணம் ஆகும். இந்தியாவில் மாத்திரம் ஒரு வருடத்திற்குப் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்ட பிறகு கலைக்கப்படுகின்றன அதாவது அழிக்கப் படுகின்றன. இந்தக் கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்களுக்குத் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்). அதுபோல, பிரிட்டனில் 40 லட்சம் பெண்களுக்கும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்களுக்கும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்களுக்கும் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். திருமணமே ஆகாமல் பெண்கள் கர்ப்பமடைவதும் கைவிடப்படுவதும் மலேசிய இந்துச் சமுதாயத்தில் அதிகமாகி வருவதைக் கண்டு அங்குள்ள இந்துக்கள் பலதார மணத்தைத் தங்களுக்கும் அனுமதிக்குமாறு போராடி வருகின்றனர். (மலேசிய நண்பன் நாளிதழ் - 05.01.2002) 

1948
ஆம் ஆண்டில் மியூனிச்சில் நடந்த அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் மிகவும் ஏற்றத்தாழ்வு மிக்க பால்விகிதத்தால் ஏற்படும் பிரசசினை பற்றிப் பலவாறு விவாதிக்கப்பட்டும் இறுதிவரை எந்தத் தீர்விற்கும் வர முடியவில்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தவுடன், மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் பலதார மணத்தை சிறந்த தீர்வாக முன்வைத்தனர். இதைக்கேட்டதும் ஆரம்பத்தில் மாநாட்டிற்கு வந்தோர் அதிர்ச்சிக்கும் வெறுப்பிற்குமுள்ளாயினர். ஆயினும், இதைக் கவனமாக ஆராய்ந்த மாநாட்டினர், பலதார மணம் ஒன்றுதான் சாத்தியமான தீர்வு என்பதை ஒப்புக்கொண்டனர். இறுதியாக, மாநாட்டின் இறுதித் தீர்மானங்களில் ஒன்றாகப் பலதார மணமும் சேர்க்கப்பட்டது.

திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். 

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும், நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் பெண்களின் வாழ்க்கை காலத்தைவிடக் குறைவாகவே இருப்பதால் எந்த காலகட்டத்திலும் மனைவியை இழந்த கணவர்களை விட, கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.

சராசரியாகப் பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு, ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகப் பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

தனக்குத் திருமணமே நடக்காது என்றெண்ணித் தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.

தம் பெற்றோரால் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாறிக் கற்பிழந்து வருகின்றனர்.

மேலும் உள்ளதைக் கொண்டு நல்லது செய்ய மனமில்லாத அயல் விரும்பி விபச்சாரன்களின் உறவுகள் மூலம் பாலியல் நோய்களைத் தானும் பெற்று, தனது மனைவிக்கும் பரிசளிக்கும் அவலங்களும் அதிகரித்து வருகிறது.

இயற்கையிலேயே ஆணிணமும் பெண்ணிணமும் பெரும்பாலும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தியில் ஆணினத்தை மிஞ்சியதாக பெண்ணினம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தியுடன் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தக் காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் மரணிப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தாம் அதிகமாக மரணிக்கின்றனர்.

பலதார மணத்தைப் பற்றி மதங்கள் என்ன கூறுகின்றன

இக்கட்டுரையில் எழுதப்படுகின்றவைகள் பிற மதங்களிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யூத, கிறிஸ்தவ மதங்களில் பலதார மணம்

பைபிள் பலதார மணத்தைத் தடைசெய்யவில்லை. அதற்கு மாறாக, பழைய ஏற்பாடும் அறிஞர்களின் எழுத்துக்களும் பலதார மணத்தை அங்கீகரிப்பதையே நாம் காண்கிறோம்:

1.
மன்னன் சாலோமோனிற்கு எழுநூறு மனைவிகளும் முன்னூறு வைப்பாட்டிகளும் இருந்தாகச் சொல்லப்படுகிறது. (இராஜாக்கள் 11:3).

2.
மன்னன் தாவீதிற்கும் பல மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. (சாமுவேல் 5:13).

3.
பல்வேறு மனைவிகளுக்குப் பிறந்த மகன்களுக்கிடையே சொத்துக்களை எவ்வாறு வினியோகிப்பது என்பது பற்றிய கட்டளைகளும் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. (உபாகமம் 22:7).

4.
மனைவியின் சகோதரியை போட்டி மனைவியாக்கிக் கொள்வதற்கு மட்டுமே தடையுள்ளது. (லேவியராகமம் 18:8). 

5.
அதிகப்பட்சம் நான்கு மனைவிகள் இருக்கலாம் என 'தல்முதிக் (Talmudic) பரிந்துரைக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூதர்கள் பலதார மணப் பழக்கத்தைப் பின்பற்றியே வந்தனர். கிழக்கத்திய யூதர்கள், அவர்கள் இஸ்ரேலுக்கு வந்துக் குடியேறும் வரை, தொடர்ந்து பலதார மணத்தை அனுசரித்து வந்தனர். இஸ்ரேலில் சிவில் சட்டத்தின் கீழ் அங்கே பிற்பாடு அது தடைசெய்யப்பட்டது. இருப்பினும், சிவில் சட்டத்தை மிஞ்சும் மதச்சட்டத்தின் கீழ் பலதார மணத்திற்கு அனுமதி நடைமுறையில் இருக்கவே செய்கிறது.

புதிய ஏற்பாடு இதுபற்றி என்ன கூறுகிறது? 

பாதர் ஊஜீன் ஹில்மேன் என்பவரின் 'பலதார மணம் பற்றி மறுஆய்வு' என்ற ஆழ்ந்த ஆராய்ச்சி புத்தகத்தில் கூறுவதாவது: 'ஒருவர் ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்ற வெளிப்படையான கட்டளையோ அல்லது பலதார மணம் செய்யக்கூடாது என்ற தடையோ புதிய ஏற்பாட்டில் எங்குமே இல்லை.  Polygamy Reconsidered: African Plural Marriage and the Christian Churches 1975- p.140). மேலும், யூத சமூகத்தில் பலதார மணம் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் இயேசுகிறிஸ்து அதற்கு எதிராக எதையும் சொல்லவில்லை. (ஒரே ஒரு சட்டபூர்வ மனைவியை மாத்திரம் மணக்க வேண்டுமென்ற, ஆனால் வைப்பாட்டிகளையும் விபச்சாரத்தையும் அனுமதித்த) கிரேக்க-ரோம கலாச்சாரத்தை அனுசரித்தே பலதார மணத்தை சர்ச் தடை செய்தது என்ற உண்மையை பாதல் ஊஜீன் ஹில்மேன் நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். நம்முடைய இக்காலத்தில், மற்றொரு திருமணம் செய்வது தடை செய்யப்படுவதற்கு ரோம பழக்கவழக்கமே முன்னுதாரணம் எனலாம்.

'
பலதார மணம் கிறிஸ்துவத்திற்கு எதிரானது என்ற நம்பிக்கை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற கருத்தையும் சர்ச் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கென்யாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த ஒரு பிஷப் கூறினார்.  Aug. 1> 1987.ஆப்பிரிக்காவின் பலதார மணத்தை பற்றிக் கவனமாக ஆராய்ந்த ஆங்கிலிக்க சர்ச்சை சேர்ந்த புனித டேவிட் கிட்டாரி அவர்கள் 'முதல் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு வேறொரு திருமணம் செய்து கொள்ளும் முறையில், ஆதரவற்றுத் துன்பத்துக்குள்ளாகும் மனைவி, மக்களைக் கருத்தில் கொள்ளும் போது, பலதார மணமென்பது கிறிஸ்தவ கொள்கைகளுக்கு மிகவும் உகந்தது' எனத் தீர்மானித்துள்ளார். 

பைபிள் சில நேரங்களில் நிர்பந்த பலதார மணத்திற்கு அனுமதிக்கிறது.

'
குழந்தையற்ற விதவை, மரணித்த கணவனின் சகோதரனை - அவன் திருமணமானவனாகி இருந்தால் கூட - அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணக்க வேண்டுமெனக் கூறுகிறது. (ஆதியாகமம் 38: 8-10) (விதவையின் துன்பநிலைகள் என்ற பகுதி காண்க).

பைபிளில் 'ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.

யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது.

ஆப்ரஹாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான 'தல்முதிக்' (Talmudic) குறிப்பிடுகின்றது. கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர், பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.
இந்து மதத்தில் பலதார மணம்

இந்துக்களில் சிலர், இந்து வேதங்கள் பலதார மணத்தை அனுமதிக்கவில்லை 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற சித்தாந்தத்தைத்தான் கூறுகின்றது எனத் தவறாக விளங்கி, மற்றவர்களுக்கும் அதையே சொல்கின்றனர். பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.
 
பலதார மணத்தைப்பற்றி இந்து வேதங்கள்

ஒரு பிராமணர் நான்கு மனைவியரை மணக்கலாம் (விஷ்ணுஸ்மிருதி 24:1)

கிருஷ்ணருக்குப் பதினாராயிரம் மனைவிகள் இருந்ததாக இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்படுகின்றது.

அதுபோக ஒரு பெண்ணிற்குப் பல கணவர்கள் (பஞ்ச பாண்டவர்களுக்கு திரௌபதி என்கிற ஒரு மனைவி) இருந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்படுகின்றது.

ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்ட (கிட்டத்தட்ட அறுபதாயிரம்) மனைவிகளைக் கொண்டிருந்தார்.
முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை என இரண்டு மனைவிகள் இருந்தனர்.

பலதார மணம் செய்து கொள்வதில் முன்னணியில் உள்ளவர் யார்?

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM) 1975ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி '1951ஆம் ஆண்டுக்கும் 1961 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டிருந்தனர்' என்று கூறுகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும். இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் முன்னணி வகிக்கின்றனர்.

1953
ஆம் ஆண்டுவரை இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளச் சட்டபூர்வமான தடையேதும் இல்லாமல்தான் இருந்தது. 1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட, 'ஒன்றுக்கு மேற்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது' என்று இந்து ஆண்களைத் தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே தவிர இந்து வேதங்களன்று.

பலதார மணத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?

உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்துவது திருக்குர்ஆன் மட்டும்தான்.

திருக்குர்ஆனின் மனைவியர் (அந்நிஸா) என்னும் நான்காவது அத்தியாயத்தின் 3 ஆவது வசனம் 'உங்களுக்கு விருப்பமான பெண்களை - இரண்டோ, மூன்றோ, நான்கோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)' என்று சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அதே அத்தியாயத்தின் 129 ஆம் வசனத்தில், '(இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவியர் இருந்து, உங்கள்) மனைவியரிடையே (முற்றிலும்) சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது' என்று மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு அனுமதியேயன்றி கட்டாயமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் 4:3 ல் 'சமநீதி செலுத்த முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)' என்று கூறுவதன் மூலம் ஒரேயொரு பெண்ணை மணந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. மேலும் 4:129 ஆவது வசனத்தில் 'சமநீதி செலுத்த வேண்டுமென நீங்கள் (எவ்வளவு) விரும்பினாலும் உங்களால் முடியாது' என்று கூறுவதன் மூலம் ஒரு பெண்ணையே மணந்து கொள்வதை அதிகமதிகம் வலியுறுத்துகின்றது என்பதையும் புரிந்துகொள்ளலாம். 

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முந்தைய கால கட்டங்களில் பலதார மணத்திற்குத் தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; இத்தனைதான் என்ற வரையறை என்பது இல்லாமலிருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு இஸ்லாத்தில் ஓர் ஆண் அதிக பட்சமாக நான்கு பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்று வரம்பு கட்டியது. அதுவும் மனைவியரிடையே சமமான நீதி செலுத்த வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையோடுதான் பலதார மணத்திற்கு வரையறையுடன் கூடிய அனுமதி அளித்தது - அனுமதிதான்; கட்டாயமன்று.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரைக் கணவராக ஏற்றுக் கொள்வது அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என்ற இரண்டைத் தவிர மூன்றாவது வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் (இரண்டாம் தாரமான) முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - (பொதுச் சொத்தாக மாறுவதான) இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது. 

இஸ்லாம் கூறும் ஒழுக்கமான உறவு நெறிகளைப் பின்பற்றினால் வெளிப் பெண்களுடன் தொடர்பு வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுதான் யதார்த்த நிலை. 

ஏனெனில் திருமணம் எனும் போது பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆண்கள் மட்டுமே சட்டப்படிச் செல்லுபடியாகின்ற பலதார மணத்தை நாடுவர். விபச்சாரத்திற்கோ, சின்ன வீடு வைத்துக் கொள்வதற்கோ எவ்விதப் பொறுப்பையும் சுமக்க வேண்டியதில்லை என்பதால் ஆண்கள் சீரழியும் நிலைமைதான் உருவாகும்.

ஒரு சட்டத்தை இயற்றினால் அது முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கவேண்டும். 1400 வருடங்களுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும் அது இந்த காலத்தின் நடைமுறைகளுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. 'இஸ்லாமியச் சட்டங்களை ஏற்கக்கூடாது, ஏனெனில் அவை பழங்காலத்தவை' என்று கூறக்கூடியவர்கள், கூடா உறவுகளைத் தடுக்கக் கூடிய ஒரு மாற்று வழியை எடுத்து காட்ட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் கூற வேண்டும். 

இஸ்லாத்தில் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிப்பதற்கு இன்னும் வேறு பல காரணங்கள் இருந்தாலும் - தங்களின் மானத்தை மட்டுமல்லாது - முக்கியமாகப் பெண்களின் மானத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

இஸ்லாம் ஆண்கள் பலதார மணம் செய்வதை வரவேற்கத்தக்க ஒன்றாகவோ அல்லது கட்டாயம் ஒவ்வொரு ஆணும் பலதார மணம் செய்தாக வேண்டும் என்றோ கட்டளையிடவில்லை. மாறாக ஒரு ஆண் தான் விபச்சாரத்திற்கு சென்றுவிடுவோம் என்று அஞ்சினால் அவ்வாறு அந்த மானகேடான காரியத்தை செய்யாமல் இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது அவ்வளவு தான்.

முஸ்லிம்களுக்கு

பொதுவாக எந்த ஒரு இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், ஒரு முஃமினினுடைய மனநிலை எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை திருமறைக் குர்ஆன் மிகவும் தெளிவாக (அஹ்ஸாப் என்னும்) 33வது அத்தியாயம் 36வது வசனம் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசம் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்' 

நமது அறிவுக்கு சரியென்று தோன்றினாலும் அல்லது தவறென்று தோன்றினாலும் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டு விட்டால் அதனை நமது அறிவோடு ஒப்பிட்டு பார்க்காமல் அதனை அப்படியே பின்பற்ற வேண்டியது தான் நம்முடைய கடமையென்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.

வல்ல இறைவன் நம் அனைவரையும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் புரிந்து அதன்படி நடக்க வழிவகை செய்வானாக!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001