இஸ்லாமிய பார்வையில் ஜல்லிகட்டு

இஸ்லாமிய பார்வையில் ஜல்லிகட்டு
இஸ்லாத்தில் ஜீவகாருண்யம்
இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது.“பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள்ள, வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”   (திர்மிதி)
தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)
“ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)
இவ்வாறான ஏராளமான நபிமொழிகள் உயிரினங்களிடம் அன்பும், பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நபி(ஸல்) அவர்கள் அன்றைய அரேபியர்களிடம் காணப்பட்ட ஜீவகாருண்யத்திற்கு எதிரான அனைத்துச் செயல்களையும் தடுத்தார்கள்.

உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியிருக்கின்றார்கள். அவற்றிற்குரிய உரிமைகளை நிறைவேற்றியிருக்கின்றார்கள்; நிறைவேற்ற ஏவியிருக்கின்றார்கள். அண்ணல் நபியவர்கள் எந்த ஓர் உயிருக்கும் தீங்கிழைக்கவோ, வதை செய்யவோ அனுமதிக்கவில்லை. அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இதற்குச் சான்றளிக்கின்றன.
நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்" என்று கூறினார்கள்.
ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின் ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். வெகுநேரமாகியும் திரும்பவில்லை. நபித்தோழர்கள் சிலர் அத்தோட்டத்திற்குள் சென்றபோது, ஓர் ஒட்டகம் அண்ணல் நபியவர்களிடம் அழுதுகொண்டு, என் முதலாளி என்மீது அதிகச் சுமையை ஏற்றுகிறான்; எனக்குச் சரியாகத் தீனி தருவதில்லை; என்னை அடித்துத் துன்புறுத்துகிறான் என்று முறையிட்டது. இதைக் கேட்ட நபியவர்கள், இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்? என வினவ, நான்தான் அல்லாஹ்வின் தூதரே! என ஒருவர் நபியவர்கள்முன் வந்து நின்றார். அவரை நோக்கி, இனிமேல் நீ இதை அடிக்கக்கூடாது. அதிகச் சுமைகளை ஏற்றக்கூடாது. இதற்குத் தீனி போட்ட பின்னரே நீ உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
உயிர் வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்ட வேண்டுமென்றே அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்யம் என்றால்..?
உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும்.
மனிதன் மனிதனுக்கு கருணை காட்டுவது போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் அவன் கருணை காட்ட வேண்டும். 
பகுத்தறிவற்ற வாய்பேச முடியாத மிருகங்கள், பறவைகள் அனைத்தும் கண்டிப்பாக பரிவு காட்டப்பட வேண்டியவை.
கருணை காட்டு.... காட்டப்படுவாய்! பூமியில் உள்ளோருக்கு நீங்கள் இரக்கம் காட்டுங்கள்! வானில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான். (நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
தாகம் தணித்தால் பாவம் போகும்!
ஒரு விபச்சாரி, நாவறட்சியுடன் நாக்கை தொங்கப்போட்டு நின்று கொண்டிருந்த நாய்க்கு தன் மோசாவைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் முடிந்து வாளியாகப் பயன்படுத்தி தண்ணீர் அள்ளிக் கொடுத்து அந்த நாயின் தாகம் தனித்ததற்காக அவளது பாவக் கறைகளை எல்லாம் பரிசுத்தமாக்கி பாக்கியாமான சுவன வாழ்வைப் பரிசாகத் தந்தானே படைத்தவன்.. புகாரியில் பதியப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி பிரபல்யமானது தானே?

பிற உயிர்களுக்கு காருண்யம் காட்டினால் கருணையாளன் நமக்கு அதைவிட சிறந்த காருண்யத்தைக் காட்டுகிறான் என்பதுதானே..!
பரிவு காட்டினால் பரிசு கிடைக்கும்!
ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.
புகாரியில் இன்னொரு நபிமொழி இப்படி வருகிறது:
''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு,அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2363)
பூனையின் தந்தை:
அபூஹுரைரா ரலி அவர்களுக்கு அந்த அழகான செல்லப் பெயர் எப்படி வந்தது ?
அவர்களுக்கு ஜீவராசிகள் என்றால் அவ்வளவு பிரியம். அதிலும் பூனை என்றால் கொள்ளைப்பிரியம் ஒருநாள் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு பூனை வந்து குளிருக்கு இதமாக அபூஹுரைரா ரலி அவர்களின் மேனியை ஒட்டிக் கொண்டு படுத்தது. தூங்கி எழுந்து பார்க்கிறார்கள் பூனை அவர்களது ஜுப்பாவின் ஓரத்தில் படுத்திருந்தது. அந்தத் துணியை உருவினால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிற அந்த பிராணியின் தூக்கம் தடைபடுமே என்று அதை அப்படியே கத்தரித்து விட்டுவிட்டு எழுந்தார்கள்.
பூனையின் மீது அவர்கள் காட்டிய அந்தப் பரிவின் அடையாளமாய் அபூஹுரைரா (பூனையின் தந்தை) என்ற அழகான செல்லப் பெயரால் அண்ணல் நபிகளார் (ஸல்) அழைத்தார்கள். இன்றளவும் அந்தப் பெயர்தானே நின்று நிலைக்கிறது?
இப்படித்தான் அருமை நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிருகங்கள், பறவைகளுடன் மிகுந்த வாஞ்சையுடன் நடந்துகொண்டார்கள். தம் தோழர்களை இப்படியே நடந்துகொள்ளுமாறு பணித்தார்கள். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவதன் மூலம் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளையும் அவற்றை துன்புறுத்துவதன் மூலம் கிடைக்கும் பெரும் தண்டனைகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
தாயைப் பிரிந்து தவிக்கவிடாதீர்!
நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப் பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும் நோவினை கொடுக்காதீர்கள்" என்று கூறினார்கள்.
பட்டினி போடாதீர்!
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாகனத்தில் என்னை அவர்களுக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டார்கள். அன்சாரிகளில் ஒரு மனிதரின் தோட்டத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அப்போது ஓர் ஒட்டகை. அது நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் கண்டபோது அனுங்கியது, அதன் இரு கண்களும் கண்ணீர் வடித்தன. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அதனிடம் வந்து அதன் தலையைத் தடவியபோது அது அமைதியடைந்தது. 'இந்த ஒட்டகையின் சொந்தக்காரர் யார்?இவ்வொட்டகம் யாருக்குரியது?' என அவர்கள் கேட்க அன்சாரிகளைச் சேர்ந்த ஓர் இளைஞர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்குரியது என்றார். 'அல்லாஹ் உமக்கு உரிமையாக்கியுள்ள இம்மிருகத்தின் விஷயத்தில் நீர் அல்லாஹ்வைப் பயப்படுவதில்லையா? ஏனெனில் நீர் அதை பசியில் போட்டு களைப்படையச்செய்வதாக அது என்னிடம் முறையிட்டது' என்றார்கள். (நூல் : ஸுனன் அபீ தாவூத்)
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒட்டகையைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிறுடன் ஒட்டி இருந்தது. 'இவ்வாய்பேச முடியாத மிருகங்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவை மீது சவாரிசெய்யுங்கள்! மேலும் அவை நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றை உண்ணுங்கள்!' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு அல்-ஹன்லலிய்யஹ் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸுனன் அபீ தாவூத் .மிருகத்தை, பறவையை அடித்தல், தாக்குதல், உறுப்புக்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றின் தேக நிலையைக் கவனியாது வேலை வாங்குதல்,சக்திக்கு அப்பாற்பட்டு வேலையில் ஈடுபடுத்தல், அவற்றுக்கு நீர், தீனி கொடுப்பதில் அலட்சியமாக இருத்தல்... இவ்வளவு ஏன்.. அதைத் திட்டுவது கூட பாவம்தான்.
திட்டித் தீர்க்காதீர்!சேவலை திட்டாதீர்கள் அது எம்மை தொழுகைக்காக எழுப்புகின்றது (நஸாஈ)
மிருகத்தை சபிப்பதைக்கூட இஸ்லாம் தடுத்தது.
நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். ஒரு சாபமிடல் அவர்களுக்கு கேட்டது. இது என்ன என்றார்கள். இது ஒருத்தி தன் வாகன ஒட்டகத்தை சபித்தாள் என்றனர் அவர்கள் (கூட இருந்தவர்கள்). நீங்கள் அதனை விட்டும் (சுமையை) இறக்கிவிடுங்கள்! ஏனெனில் அது சாபமிடப்பட்டுள்ளது என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆகவே அவர்கள் அதனை விட்டும் (சுமையை) இறக்கிவிட்டனர். கறுப்பு கலந்த ஒரு வெள்ளை பெண் ஒட்டகையாக நான் அதனைப் பார்க்கிறேன். (நூல் : ஸுனன் அபீ தாவூத்)
பாடாய்ப் படுத்தாதீர்!
நீங்கள் மிருகங்களுக்கு முகத்திலே அடிப்பதையும் முகத்திலே அடையாளம் இடுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள் (புகாரி), பிராணிகளுக்கு அணியாயம் செய்பவர்களை சபித்ததோடு, அவற்றின் மீது அதிக எடை ஏத்துவதையும் நபியவர்கள் தடை செய்ததுடன், மிருகங்களுக்கு மேல் மூன்று பேருக்கு மேல் ஏறிச் செல்வதையும் தடுத்துள்ளார்கள்.
இரண்டு பிராணிகளை தூண்டி விட்டு அவை மோதுவதை வேடிக்கை பார்ப்பதை தடுத்தார்கள். எந்தப் பிராணியை ஒருவன் வீணாக கொன்றானோ அந்தப் பிராணி நாளை மறுமை நாளில் அவனுக்கு எதிராக அது வாதாடும் (நஸாஈ)
பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், அவள்  அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
எவர் கருணை காட்டுவதில்லையோ அவருக்கு கருணை காட்டப்படுவதில்லை. (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : சஹீஹ் அல்-புகாரி)
வாயில்லா ஜீவன்களுக்கிடையில் சண்டையைத் தூண்டிவிடுவது பற்றி கடுமையான தடை இஸ்லாத்தில் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவை காயமுறுகின்றன, மரணமெய்துகின்றன.
மிருகங்களுக்கிடையில் சண்டையைத் தூண்டுவதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்தார்கள். ( நூல்: ஸுனன் அபீதாவூத்)
பறவையை, மிருகத்தை எறிவதற்கு இலக்காக எடுத்துக்கொள்வது கூடாது. இதனை புனித இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒரு பறவையை வைத்து அதனைக் குறி பார்த்து எறிந்துகொண்டிருந்த குரைஷி இளைஞர்கள் சிலரைத் தாண்டிச் சென்றார்கள் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள். அவர்களின் அம்பில் குறி தவறக்கூடிய ஒவ்வொன்றையும் பறவைச் சொந்தக்காரருக்கென அவர்கள் ஆக்கிவைத்திருந்தனர். இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா)வைக் கண்டதும் அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். யார் இதனைச் செய்தவர்? இதைச் செய்தவரை அல்லாஹ் சபிப்பானாக! உயிருள்ள ஒன்றை இலக்காக எடுத்துக் கொண்டவரை திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சாபமிட்டார்கள் என்றார்கள்۔(நூல்: சஹீஹ் முஸ்லிம்)
சவாரிசெய்ய உதவுகின்றதென்பதற்காக அமர்ந்திருந்துகொள்ளும் நாற்காலிகளாக மிருகங்களைப் பயன்படுத்தலாகாது.
களைப்புறாதவையாக இருக்கும் நிலையில் இம்மிருகங்களில் சவாரிசெய்யுங்கள்! மேலும் களைப்புறாதவையாக இருக்கும் நிலையில் அவற்றை விட்டுவிடுங்கள்! (நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
பறவைகள், மிருகங்களை அவற்றின் பயன்பாடறிந்து பயன்படுத்த வேண்டும். ஒன்றிருக்க வேறொன்றுக்காக உபயோகிப்பது தவறாகும். பின்வரும் ஹதீஸில் இவ்வுண்மை தெளிவாகின்றது:
அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹ் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மக்களை நோக்கி 'ஒரு மனிதர் பசுவொன்றை ஓட்டிக் கொண்டிருக்கையில் அதன் மீதேறி அதனை அடித்தார். நிச்சயமாக நாம் இதற்காகப் படைக்கப்படவில்லை. உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளோம் என அது கூறிற்று' என்றார்கள். (நூல் : சஹீஹ் அல்-புகாரி)
ஒரு கேள்வி: இந்தளவு ஜீவகாருண்யம் வலியுறுத்துகிற மார்க்கம் குர்பானி கொடுக்க ஏன் கூறுகிறது? அது உயிர்வதை இல்லையா? இது குறித்து விரிவான கட்டுரை தனியாக இடம்பெறுகிறது. இங்கே சுருக்கமான விளங்கிக் கொள்வோம்:
குர்பானியில் நிச்சயமாக உயிர் வதை இல்லை.
படைப்பாளன் அல்லாஹ் மாத்திரமே தனது படைப்புக்களின் தன்மைகளை,அமைப்புக்களை, நோக்கங்களை, இரகசியங்களை, பயன்களை நன்கு நுணுகி அறிந்தவன். அவன்தான் சில வகை மிருகங்களை, பறவைகளை மனிதன் அறுத்தும் வேட்டையாடியும் சாப்பிட அனுமதித்துள்ளான்.
அதே போல  சில சந்தர்ப்பங்களில் சில வகை மிருகங்களை அறுத்து அதன் மாமிசங்களை வறுமைப்பட்டோர், உற்றார், உறவினர் போன்றோருக்கு கொடுத்துதவும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
ஆனால் மிருகங்கள் எந்த வகையில் அறுக்கப்பட்டாலும் அதற்குரிய சிறப்பான சட்டவிதிகளை புனித இஸ்லாம் அறிமுகம்செய்து, அறுத்தலின்போதும் அதற்கு முன்னரும் பின்னரும் அவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றி உரிய முறையில் அறுக்கப்படும்போது அது ஒருபோதும் மிருக வதையாக ஆகாது.
         அறுக்கும்போது நன்கு கூர்மையான கத்தி கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி விரைவாக அறுத்தல் வேண்டும்.
         கத்தியை மிருகம் காணும்படி வைத்துக்கொள்ளல், தீட்டுதல் ஆகாது.
         மிருகங்களை அறுப்பதற்காக கொண்டு வரும்போதும் அறுக்கத் தயாராகும் வேளையிலும் அம்மிருகங்களுக்கு இம்சைசெய்யக் கூடாது.
         வேறு மிருகங்கள் பார்த்திருக்கும் நிலையில் அறுத்தலாகாது.
ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொன்னார்கள்: நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிலும் நன்முறையில் நடந்து கொள்வதை கடமையாக்கியுள்ளான். மேலும் நீங்கள் அறுத்தால் அறுத்தலை நன்முறையில் செய்யுங்கள்! உங்களில் ஒருவர் தன் கத்தியை தீட்டிக்கொள்ளவும்! தனது அறுவைப் பிராணிக்கு இலகுவைக் கொடுக்கவும்! (நூல் : ஸுனன் அல்-திர்மிதி)
அல்லாஹ்வின் தூதரே! நான் ஆட்டை அறுத்தால் அதற்கு நான் கருணை காட்டுகிறேன் என்றார் ஒரு மனிதர். நீர் அதற்கு கருணை காட்டினால் அல்லாஹ் உமக்கு கருணை காட்டுவான் என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு மனிதர் ஆடொன்றை அறுக்கும் பொருட்டு தனது கத்தியை தீட்டிக்கொண்டே அதனை ஒருக்களித்துப் படுக்கச்செய்தார். 'அதனைப் பல தடவைகள் மரணிக்கச்செய்யப் பார்க்கின்றீரா? அதனை ஒருக்களித்துப் படுக்கச்செய்வதற்கு முன் உமது கத்தியை நீர் தீட்டி இருக்கலாமே!' என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)
ஒரு சிட்டுக்குருவியை, அதற்கு மேலுள்ளதை அதன் உரிமையின்றி எவர் கொல்வாரோ அதனைக் கொன்றது பற்றி அல்லாஹ் அவரிடத்தில் விசாரிப்பான். அல்லாஹ்வின் தூதரே! அதன் உரிமை என்னவென கேட்கப்பட்டது. அதனை நீர் அறுத்து சாப்பிடுதல், அதன் தலையை நீர் வெட்டி, அதனை வீசாதிருத்தல் என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸுனன் அல்-பைஹகி)
'மிருகங்களைத் தடுத்துவைத்து அவற்றை எறிந்து கொல்வதை விட்டும் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடுத்தார்கள்' நூல் : சஹீஹ் அல்-புகாரி)
இஸ்லாம் கூறுகிற முறைப்படி அறுத்தால் உண்மையில் பிராணிக்கு எந்த வித சித்திரவதையும் ஏற்படாது என்பது இன்றைய ஆராய்ச்சி கூறும் உண்மை
ஜல்லிகட்டு குறித்து நமது நிலை!
தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும் ஜல்லிகட்டு பற்றிய விவாதங்கள் இரண்டு நாளாக அனல் பறக்கிறது!
இதில் பெரும்பாலோர் வைக்கும் வாதம் தமிழரின் பாரம்பரியம் கலாச்சாரம், வீர விளையாட்டு என்பது தான்! 
எதிர்த்தரப்பு இது மிருக வதை என்கிறது!
முதலாவதாக இது வீர விளையாட்டு என்பது தவறான வாதம்! வீரம் என்றால் தனி ஒருவராக மாட்டை களத்தில் சந்தித்தால் வீரம் ! நூற்றுக்கணக்கான பேர் சேர்த்து மாட்டை விரட்டுவது தமிழரின் வீரம் என்பதே தவறான வீரமாக உள்ளது!
இதைச் சொல்லும் போது நம்மை நோக்கி அதை அறுத்து சாப்பிடும் நீங்கள் மிருக வதை பற்றி எல்லாம் பேசக்கூடாது ! என்கிறார்கள்! ஏதோ நாம் மட்டும் தான் நாட்டில் மாட்டை அறுத்து சாப்பிடுவது போல்! இந்த நாட்டில் முஸ்லிம்களுக்காக அறுக்க படும் மாடுகளை விட இந்துக்களுக்காக வெட்டப் படும் மாடுகளே அதிகம் என்பது தான் உண்மை!
உணவுக்காக, விவசாயத்துக்காக, சவாரிக்காக பயன்படுத்தலாமே தவிர இது போன்று கேளிக்கைகளுக்காக பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது! உணவுக்காக அறுக்க படும் போது கூட கத்தி கூர்மையாக இருக்க வேண்டும் ! வலியை உணரும் நரம்புகளை முதலில் அறுக்க வேண்டும் என விதிமுறை வைத்து இருக்கிறது!
எந்த மிருகத்தையும் உணவுக்காக அறுப்பதை மிருகவதை என்று இஸ்லாம் மட்டுமல்ல இந்த நாட்டு சட்டமும் கருதவில்லை! உலகில் எங்கும் இல்லை! கருதி இருந்தால் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்து இருக்கும்! அது ஒரு உணவுச் சங்கிலி உலக உணவுச் சமன்பாட்டுக்காக இறைவனின் வழிமுறை!
ஆனால் மாட்டுப் பொங்கல் அன்று வணங்கி விட்டு நீங்கள் வணங்க கூடிய ஒரு காளையை இப்படித்தான் 500 பேர் சேர்ந்து படுத்துவதா ? 500 மாடுகளுக்கு நடுவே ஒரு மனிதனை விட்டால் அவன் நிலை என்ன?
நாங்கள் குழந்தையை போல வளர்க்கும் மாட்டுக்கு துன்பம் விளைவிப்போமா ? என்கிறார்கள் ! முன் பின் அறிமுகம் இல்லாத 300பேர் உங்கள் குழந்தையை ஒரு குறுகிய இடத்தில் அடைத்து வைத்து இந்த மாட்டை பிடிப்பது போல் வாலைப் பிடித்து இழுத்து தலையை பிடித்து இழுத்து, மேலே ஏறி மிதித்து விளையாட அனுமதிப்பீர்களா?
நமது மகிழ்ச்சிக்காக இது போன்று ஒரு மிருகத்தை நூற்றுக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து பிடிப்பது வதைப்பது , வதைபடுவதை வீரம் என்பதும் கலாச்சாரம் என்பதும் சரியானதாக படவில்லை!
ஆனால் அரசியல் ரீதியாக பெரும்பான்மை மக்களின் பண்டிகை சம்மந்தமான விஷயமாக இருப்பதால், மத்திய மாநில அரசுகள் பேசி வருவதால் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவுக்கு நிறகும் என்பது தெரியவில்லை! குறைந்த பட்சம் பாதுகாப்பு விதிகள் கடுமையாக கடைபிடிக்க படவேண்டும்! அது மாடுகளுக்கு மட்டும் அல்ல மனிதர்களின் பாதுகாப்பும் தான்!
தமிழகத்தில் வீரவிளையாட்டுகள் என்று சிலவிசயங்கள் நடைமுறையில் உள்ளன.அதில் சிலவிஷயங்கள் மனிதர்களின் உயிருக்கு உளைவைப்பதாகவும், மிருகங்களை வதைசெய்வதாகவும் உள்ளது.மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஆறு பேர் பலியாகியுள்ளனர். ஐந்நூறு பேர் காயமாகியுள்ளனர். இதுபோக மாடுகளை வதை செய்வதையும் பார்க்கிறோம்.அதாவது, வீரம் என்றால் நாம் எதை சொல்வோம் பத்துபேர் சேர்ந்து ஒருவனை அடிப்பதையா? இல்லை. ஒத்தைக்கு ஒத்தையாக நின்று ஜெயிப்பவனையா? ஜல்லிக்கட்டை நீங்கள் பார்த்தால் ஒரு மாட்டை பலபேர் அதன்மீது விழுந்து அமுக்குவதை காணலாம். திமிளைப்பிடித்து தொங்குவதும், வாலைப்பிடித்து இழுப்பதும் இப்படியான வேதனைகள்.மேலும், சிலபகுதிகளில் எருதுகட்டு என்றபெயரில் மாட்டை வடத்தில்கட்டி, அதை ஓடவிடாமல் செய்து அதை பலபேர் சேர்ந்து அமுக்குவது. அதுபோல, கோவில் திருவிழா மற்றும் தலைவர்களின் பிறந்தநாள்விழா இப்படி சில நிகழ்ச்சிகளில் மாட்டுவண்டி பந்தயம் என்ற பெயரில் மாடுகளை கடுமையாக ஓடவிடுவதும், சாட்டையால் அடிப்பதும், தார்கம்பால் ரத்தம் வழியும் அளவுக்கு குத்துவதும் இதுபோன்ற கொடூரங்களை பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதை முன்னிட்டு தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. தமிழக அரசின் மேல்முரையீட்டால் சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. அனால் ஜல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்வதே சரியாகும். இல்லையென்றால் மாடுகளை தொடாமல் ராமராஜன் மாதிரி பாட்டுப்பாடி காளைகளை அடக்கட்டும்.இதுபோக ஆடுகளை மோதவிடுவது, சேவல்களின் காலில் கத்தியை கட்டி மோதவிடுவது இதுபோன்ற மிருகவதைகளும் தடைசெய்யப்படவேண்டும்.கால்நடைகள் நமக்கு பலவகைகளில் உதவியாக இருக்கிறது. உதவி செய்த ஜீவனுக்கு உபத்திரவம் செய்வதுதான் மனித பண்பாடா?என்பதை சிந்திக்கவேண்டும்.முஸ்லிம்களும், ஏனைய அசைவப்பிரியர்களும் உணவுக்காக உயிரினங்களை அறுப்பதை மிருகவதை என தத்துவம் பேசிய ஜீவகாருண்ய மேதைகள்' கண்முன்னே நடக்கும் இந்த கொடூரங்களை கண்டுகொள்ளாதது ஏன்?
இஸ்லாத்தில் ஆடு மாடுகளை அறுத்து பலி இடுவது மிருகவதை அல்லவா?
இஸ்லாம் மிருகவதை பற்றி என்ன சொல்கிறது? ஏன் என்றாள் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவது இரக்க குணத்தை இழக்க செய்து விடும்தானே?
எல்லா உயிரினங்களும் மனிதனின் நன்மைக்காகப் படைக்கப்பட்டன என்பது இஸ்லாத்தின் கொள்கை. மனிதனுக்குக் கேடுதரும் உயிர்களை அழிக்கலாம். அதை உண்பதால் மனிதனுக்கு நன்மை என்றால் அப்போதும் அழிக்கலாம் என்று இஸ்லாம் தெளிவாக அறிவிக்கிறது.
ஆனால் இஸ்லாம் தவிர உலகில் மற்ற சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் அறிவிக்காமல் அதே வதையைச் செய்து வருகின்றனர்.
மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை அழிக்கலாம் என்று பகிரங்கமாக அறிவிப்பதில் மட்டும் தான் இஸ்லாத்திற்கும், மற்ற சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருக்கிறது. உயிரினங்களை வதைப்பதில் அல்ல.
* கொசு, மூட்டைப்பூச்சி ஆகியவை கடிக்கின்றன என்பதற்காக அதற்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. கடித்ததற்கு மரண தண்டனை என்பது வதையில்லையா?
* நமது உணவுகளை உண்டு விடுகிறது என்பதற்காக எலிகளைக் கொல்வது வதையில்லையா?
* நமக்கு வயிற்று உபாதை தருகிறது என்பதற்காக தண்ணீரில் உள்ள உயிர்களை தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொல்வது வதையல்லவா?
* கன்றுக் குட்டிக்காக சுரக்கும் பாலை வாயில்லா ஜீவனை ஏமாற்றி அருந்துவது வதையல்லவா?
* வண்டிகளிலும், ஏர்களிலும் பூட்டி மாடுகளை வதைப்பது ஜீவ காருண்யமாகுமா?
* மருத்துவப் பரிசோதனைக்காக எத்தனையோ உயிர்கள் அறுத்துக் கொல்லப்படுகிறது. மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்காக மற்ற உயிர்களை அறுத்துச் சோதிப்பதும் வதையல்லவா?
* நாய் கடித்து விட்டால் அதற்கு போடப்படும் ஊசி மருந்து எத்தனை உயிர்களைக் கொன்று தயாரிக்கப்படுகிறது?
* தாவரங்களுக்குக் கூட உயிர் இருக்கிறது. அதனால் தான் அவை வளர்கின்றன; காய்க்கின்றன; பூக்கின்றன; இனவிருத்தி செய்கின்றன. அவற்றை அழித்து உண்பது வதையல்லவா?
இவ்வாறு செய்பவர்கள் வதை கூடாது என்று கூறிக் கொண்டு வதைக்கின்றனர். தமக்குத் தாமே முரண்படுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் எவ்வித முரண்பாடும் இல்லாமல் தெளிவாக அறிவித்துவிட்டு ""உனக்குப் பயன் இருந்தால் மட்டும் மற்ற உயிர்களைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறுகிறது. வித்தியாசம் அவ்வளவு தான். இஸ்லாம் சகல உயிர்கள் மீதும் காருண்யத்தைக் காட்டுமாறு கூறும் சன்மார்க்கமாகும். இருப்பினும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை ஒரு குறையாகவோ, குற்றமாகவோ இஸ்லாம் காணவில்லை. குர்பான், அகீகா, உழ்ஹிய்யா போன்ற சந்தர்ப்பங்களில் உயிர்ப் பிராணிகளை அறுத்துப் பிரருக்கு உண்பதற்காக அளிப்பதை வணக்கமாகக் கூட இஸ்லாம் கருதுகின்றது.
“அன்று அரேபியர் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இச் செயலை நபி(ஸல்) அவர்கள் தடுத்ததுடன் இவ்வாறு செய்பவர்களை சபிக்கவும் செய்தார்கள்”        (முஸ்லிம், புஹாரி :5515)
இவ்வாறே அன்றைய அரேபியர் விருந்தாளிகள் வந்தால் முழு ஒட்டகத்தையும் அறுக்க முடியாது, குறைந்த மாமிசம் வாங்க முடியாது என்ற நிலையில் உயிருடனுள்ள ஒட்டகத்தில் ஒரு துண்டை வெட்டியெடுத்துச் சமைப்பர். நபி(ஸல்) அவர்கள் இதை வன்மையாகக் கண்டித்து இவ்வாறு பெறப்பட்ட மாமிசத்தைப் புசிப்பதும் ஹராம் என்றார்கள்.
இவ்வாறு உயிரினங்களுக்கு உரிய முறையில் உணவு, நீர் கொடுக்காதிருந்தால், அதன் சக்திக்கு மீறி அவற்றிடம் வேலை வாங்குதல், ஓய்வு கொடுக்காதிருத்தல், குட்டியையும் தாயையும் பிரித்தல் போன்ற பல அம்சங்களையும் தடுத்துள்ளார்கள்.
இவற்றையெல்லாம் தடுத்து ஜீவகாருண்யத்தை ஏவினாலும் மனித உணவுத் தேவை கருதி இஸ்லாம் சில உயிரினங்களை உரிய முதலில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. இதை இஸ்லாம் மட்டும் அனுமதிக்கவில்லை. சர்வ சமயங்களும் மாமிசம் உண்பதை அனுமதித்தேயுள்ளன. ஆதி மனிதனது ஆரம்ப உணவில் கூட மாமிசமே முதலிடம் வகித்தது
























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001