வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்



 

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன. 


ஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, "வியாபாரிகளே" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து  "வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

நபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து "வியாபாரிகளே! பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என "தபரானி"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.


வியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.  

"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்......."

அளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும். 

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன்  (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக"  என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)


2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்களை வாங்குதல்

ஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.

"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும்  பங்கேற்றவராவார்". (அல் பைஹகீ)

அவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.


3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்

அதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.

"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்" (புஹாரி) 
"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)


4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்

பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

ஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.


5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்

வாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில் விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் "விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும்  விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)

இந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.

பொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.


6. பதுக்கல் - அல் இஹ்திகார்

விலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

1. "பதுக்கியவன் பாவி" (முஸ்லிம், அபூதாவூத்)
2. "உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்   
     அவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்ஹாகிம்)
3. "பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான். 
     வில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்." (றஸீன்)

அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.

அவையாவன: 

1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும்  அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.

2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.

3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.

7. வட்டி - (அர் ரிBபா)

வட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"

"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது.  நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)

"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்"  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)
"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)

இஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.

அதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. ரிbபா - அந் நஸீஆ
2. ரிbபா - அல் பழ்ல்

   ரிbபா - அந்நஸீஆ 
ரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.

   ரிbபா - அல் பழ்ல்
ரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.

முதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்." (முவத்தா மலிக்)

ஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.

"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி)

ஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)

எனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

1. இரண்டும் சம அளவாக இருத்தல்: 
இங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.

2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.

இரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும்.  ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.

கைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும் 

மேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

8. அல் ஈனா

இது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001