இஸ்லாமிய பார்வையில் உழைப்பின் சிறப்பு

ஹலாலான உழைப்பின் சிறப்பு
இஸ்லாம், மறு உலகத்தின் தயாரிப்பான வணக்க வழிபாடுகளை ஆர்வ மூட்டவதைப் போலவே உலக வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்ற ஆகுமான உழைப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
இஸ்லாம் உழைக்காமல் சோம்பேரிகளாக வாழ்வதனை விரும்புவதில்லை. இதனால் அனைவரும் உழைத்து வாழ வேண்டும் என தூண்டுகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
"அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு பூமியை வாழ்வதற்கு எளிதானதாக அவன் ஆக்கிவைத்தான். ஆகவே அதன் பல பாகங்களில் சென்று, அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள். உங்களுடைய மண்ணறைகளிலிருந்து உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது" (76:15)
உழைப்பதை வலியுறுத்தும் நபிமொழிகள்:
‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்)’அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான்அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள். என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்.புகாரி: 3406, 5453.
”உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.புகாரி: 1470, 1471.
நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.புகாரி: 2071.
”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.புகாரி: 2072, 2073.
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)
ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)
உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார்.(நூல் : திர்மிதீ)
உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :
நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.
சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது.
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் சிலர் விவசாயம் செய்தனர். இன்று சிலர் கைத்தொழில், வியாபாரம், மந்தை மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் வியாபாரம், ஆடு மேய்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். ஸஹாபாக்களும் வியாபாரிகளாகவும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர்.
இஸ்லாம் ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது. சுய மரியாதையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் உழைக்குமாறு தூண்டுகின்றது.
நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்
நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்
நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்
நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்
நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்
நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்
நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்
நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்
நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல
நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்
சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள்.
ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.
மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)
இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)
ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், “இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்” எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.
ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)
ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)
இதனாலேயே நபிமார்கள் எல்லோரும் தமது வாழ்க்கைத் தேவைக்காக ஏதோ ஒரு தொழிலை செய்பவர்களாக இருந்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்துத் தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கை நீட்டி யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். -புகாரி, முஸ்லிம்
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கை நீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் வருவார்கள்.
உமர் (ரழி) அவர்கள் உழைக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து விட்டோம் எனக் கூறிக்கொண்டு பள்ளிவாசலில் முடங்கிக் கிடந்த சிலரைக் கண்டு அவர்களை நோக்கித் தமது சாட்டையை உயர்த்தி 'உழைக்காமல் வருமானத்தைத் தேடி வெளியேறிச் செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக் கூடாது" அல்லாஹ்வே எனக்கு ரிஸ்கை வழங்கு' எனப் பிரார்த்தனை செய்தால் மாத்திரம் போதாது: வானம் தங்கத்தையோ வெள்ளியையோ மழையாகப் பொழியப் போவதில்லை" எனக் கூறினார். மேலும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறும் தொழிலாளியின் வியர்வை உலருமுன் கூலியை கொடுத்து வருமாறும் பணிக்கின்றது.
அதன் மூலம் இஸ்லாம் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை முன்வைக்கின்றது என்பது தெளிவாகின்றது. எனவே சமூகங்களிலுள்ள வசதிபடைத்த செல்வந்தர்கள் அனைவரும் அவரவர் வாழ்நாளில் காணப்படும் சுயதொழியை ஏற்படுத்தி கொடுப்பார்களாயின் எமது நாடு வறுமையற்ற நாடாக மாறுவது சந்தேகம் இல்லை.
உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது
” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.
உழைத்து செலவழிப்பவரின் சிறப்புகள்
ஒரு மனிதன் (உழைத்துச்)செலவழிக்கிற தீனார்களில் சிறந்தது தன் குடும்பத்தாருக்கு செலவழிப்பதாகும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் (தனக்கு போர் புரிய உதவும் ) வாகனத்திற்கும் அடுத்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் தன் தோழருக்கும் செலவழப்பதுமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:முஸ்லிம்: 2357.
‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்புகாரி: 1425.
”உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்ற வனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.புகாரி: 1427.
நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும் உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும் தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.புகாரி: 1428
”ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி: 1442.
நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். -அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே. செல்லும் – பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.புகாரி: 7430.
ஒரு மனிதரின் வலுவையும் சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் (நபியிடம்) அல்லாஹ்வின் தூதரே இவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதில் ஈடுபட்டுக்கொண்டு) இருந்தால் நன்றாயிருக்கும் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவர் தனது சிறு பிள்ளைகளுக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். வயதான பெற்றோருக்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்.தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்கப் புறப்பட்டுச் சென்றால் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடித்துக்கொள்வதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் அவர் ஷைத்தானின் பாதையில் தான் இருப்பார்; என்று கூறினார்கள்;.
நூல் தப்ரானி: 15619.
அர்ஷின் நிழல்
தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு (வகையினருக்கு) பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான்……. அவர்களில் ஒருவன் தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்…… என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புகாரி: 1423.
உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி,அவர்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளும் பணியாளரிடம் நபி(ஸல்)அவர்கள் நடந்து கொண்ட விதமும் நடக்கச்சொன்ன விதமும்
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5460.
‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.
”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன் சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!’ என்று அல்லாஹ் கூறினான். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2270.
ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்.
திர்மிதீ: 1949.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப் பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது.உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா) ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 5225.
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லைஎன அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
புகாரி: 6038.
……உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 30 .
அதே நேரத்தில் உழைப்பாளிகளும் தங்களின் உழைப்பில் அக்கறை செலுத்துவதோடு முதலாளிகளை ஏமாற்றாமல் விசுவாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.                                                                 மேற்கூறப்பட்ட அனைத்து பொன்மொழிகளும் உழைப்பாளிகளுக்காகவே சொல்லப்பட்டவை
இப்படி உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கி யிருக்கிறதென்றால் அது மிகையல்ல எனவே உழைப்பாளிகளை கண்ணியப் படுத்துவோம் அவர்களின் உரிமைகளை வழங்கிடுவோம் அல்லாஹ்வின் அருளைப்பெற்றிடுவோம் உழைப்பாளிகளும் தங்களின் கடமைகளையும் பண்pகளையும் உணர்ந்து தங்களின் முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் தங்களின் இறைவனுக்கு பயந்து செயல்படவேண்டும் அல்லாஹ் எல்லோருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்.
ஆகவே, நாமும் இஸ்லாம் கூறியபடி உழைத்து வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போமாக!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001