இஸ்லாமின் பார்வையில் சொத்து பங்கீட்டின் அவசியம்


ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ,ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.]
இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும்.
இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வின் அனைத்து சட்டங்களையும் தன்னுடைய வாழ்வில் செயற்படுத்துவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையாகும்,
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது.
மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள். இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் 2:85)
ஆனால் இன்று எம்சமுகத்தில் என்ன நடக்கிறது என்றால் தனக்கு சாதகமான, இழப்புகள் இல்லாத, பிரச்சினைவராத சட்டங்களை மாத்திரம் பலர் ஏற்று செயல்படுகின்றனர். அல்லாஹ்வால் அழுத்தமாக முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லப்படுகின்ற பல சட்டங்களை நிராகரிக்கின்றனர்.
அப்படி நிராகரிக்கப் படும் சட்டங்களில் ஒன்றுதான் வராதத் எனும் சொத்துப்பங்கீட்டு சட்டமாகும்.
தொழுகை, நோன்பு, ஸகாத் எப்படி வணக்கமாக இருக்கிறதோ அதே போன்றுதான் வராதத் எனும் சொத்துப்பங்கீடும் ஒரு வணக்கமாகும்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ, ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பல முஸ்லிம்கள் உணரத் தவறிவிட்டனர்.
இதனால்தான் இன்று சொத்துப்பங்கீடென்பது சமூகத்தில் அந்நியமான நடைமுறைப் படுத்தப் படாத புதிய சட்டமாக மாறிவிட்டது.
இன்று சமுகத்தில் உள்ள அதிகமானவர்கள் தவறான சொத்துப் பங்கீட்டின் அடிப்படையிலேயே தங்களது பொருளாதாரத்தை அமைத்துக் கொள்கின்றனர். மார்கத்தில் உள்ள சுன்னத்தான காரியங்களுக்காக போர்கொடி தூக்கி சுன்னத் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த பல சகோதரர்கள் கூட சொத்துப் பங்கீட்டை நடைமுறைப்பபடுத்த வேண்டும் என்பதில் பொடுபோக்காக இருப்பது அல்லது அதை நடைமுறைப்படுத்த எண்ணம் இல்லாது இருப்பது அல்குர்ஆனை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
அல்லாஹ் தனது திருமறையிலேயே வசிய்யத்தாக கூறிய இந்த சொத்துப் பங்கீட்டு விடயத்தை சமுகத்தில் நடைமுறைப்படுத்த நாம் முன்வராமல் இருப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களின் குரல்வழையை நசுக்குவதற்காக முயற்சிக்கின்றோம் என்றால் அல்லது எதை வேண்டுமானாலும் பேசுங்கள் சொத்துப்பங்கீடு பற்றி பேசாதீர்கள் எனக் கூறுகிறோம் என்றால் எம்மைவிட நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?
நாம் அல்குர்ஆனை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் யார் நடைமுறைப் படுத்துவது? என்பதை ஈமான் உள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளான்.
தவறான சொத்துப்பங்கீட்டால் சமுகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற இழப்புகள் ஏராளம் ஏராளம். ஜாஹிலிய்யாக் காலத்தில் எப்படி ஆண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கப்பட்டதோ அது எமது சமுகத்தில் மாறி பெண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கும் நவீன ஐhஹிலிய்ய சிந்தனை அரங்கேறுகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் இருசாராருக்கும் சொத்துப் பங்குள்ளது எனக்கூறுகிறான்.பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்குர்ஆன் 4:7)
ஆண்கள், பெண்கள் என இருசாராருக்கும் அவரவரின் பங்குகள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் தெளிவாக கூறுகிறது. இதில் யாரும் அநீதி இழைக்கப் படக்கூடாது. யாவற்றையும்; அறி;ந்த அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருசாராரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
தனக்கு அதிகமாக பெற்றோர் சொத்தை தவறாக தருகிறார்கள் என்பதை ஒரு பெண் தெரிந்தால் கண்மூடித்தனமாக சொத்தின் மீது கொண்ட மோகத்தினால் தவறான இச் சொத்துப் பங்கீட்டுக்கு தானும் காரணமாக அமைந்து விடக் கூடாது.
மாறாக அவள் பெற்றோருக்கு தெளிவுபடுத்தி தனக்கு சேரவேண்டிய சொத்தை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் மனோநிலை உள்ளவளாக அவள் இருக்க வேண்டும்.
இதைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில்; இன்று சமுகத்தில் உள்ள எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு இலகுவாக அமைவதோடு அல்லாஹ்விடத்தில் அவனது சட்டத்தை நடைமுறைப்படுத்திய கூலியையும் அவள் பெற்றுக் கொள்வாள். அதற்கு மாற்றமாக நடந்தால் அல்லாஹ்வின் தண்டனை கடினமானது என்பதையும் மறந்து விடக் கூடாது.
''நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது''. (அல்குர்ஆன் 85:12)
மற்றவரின் சொத்தை தவறான அடிப்படையில் அனுபவிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ் தனது திருமறையில் .''நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 4:29)
''எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.'' (அல்குர்ஆன் 4:30)
முறைகேடான அடிப்படையில் மற்றவரின் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பது இறைவனின் சட்டமாகும். இந்த சட்டம் மீறப்படும் போது அவனது தண்டனையும் கடினமாகவே இருக்கும் என்பதை மேலுள்ள வசனத்தில் தெளிவாகவே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஆனால் இ;ன்று எம் சமூகத்தில் உள்ள அதிகமான மக்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளாமல் தங்களது சொத்துக்களை இஸ்லாம் அங்கீகரிக்காத ஹராமான அடிப்படையில் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்கின்றனர்.
முஸ்லிம் அல்லாதோரின் கலாசாரத்தைப் பின்பற்றி யார் யாருக்கெல்லாம் சேரவேண்டிய சொத்துக்களை திருமண சந்தர்ப்பங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் அபகரிக்கின்ற ஓர் முறையிலான தவறான சொத்துப் பங்கீட்டை இச்சமூகம் அங்கீகரித்து அரங்கேற்றி வருகிறது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இப்படி தவறான அடிப்படையில் இடம்பெறும் திருமணங்களை தடுத்து நிறுத்தி அதை பாவம் என்று சமூகத்திற்கு அடையாளப் படுத்தவேண்டிய உலமாக்களே இப்படியான திருமணங்களை அரங்கேற்றி வைத்து அதற்கு வேறு நியாயங்கள் கூட கற்பிக்கின்றனர்.
இப்படியான கொடுமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பல உலமாக்கள் இதை நியாயப்படுத்தி பெண்ணின் சொத்தை ஆண் அனுபவிப்பது தவறா? எனக்கூறி அல்லாஹ்வே அப்படி அனுபவிப்பதற்கு அனுமதித்திருக்கிறானே என ஆதாரம் வேறு காட்டுகிறார்கள்.
இந்த வசனங்கள் எல்லாம் எமது சமுகத்திற்குப் பொருந்தாது எனக்கூறி வருகிறார்கள். இஸ்லாத்தை செயல்படுத்தவேண்டிய மௌலவிமார்களின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் நிலை எப்படி இருக்கும்.
எங்கள் சமுகத்தில் வேரூன்றி இருக்கும் தவறான சொத்துப் பங்கீட்டு நடைமுறையை நாம் மாற்றவில்லை என்றால் அதற்கான முயற்சியை நாம் மேற்;கொள்ளவில்லை என்றால் குறிப்பாக கொள்கை பேசக்கூடியவர்கள் இதில் பொடுபோக்காக இருந்தால், இதில் தியாகம் செய்யும் மனநிலை எம்மிடத்தில் வர வில்லை என்றால் எப்படி இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தி சுவர்கத்திற்க்குரியவர்களாக நாம் மாறுவது?தனது முழுமுயற்சியையும் பயன்படுத்தி தேடிய தனது பொருளாதரத்தில் ஸகாத் கொடுக்க கடமையான அளவை அடைந்த பின்னரும் அதற்கு ஸகாத்கொடுக்க வில்லை என்றிருந்தால் அதற்கு இரண்டுவிதமான தண்டனையை இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது.
1. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்;. மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்;. இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்"" (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 9-34,35)
2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' ''நானே உன்னுடைய பொக்கிஷம்'' என்று கூறும். (ஆதாரம் புகாரி 1403)
தனது முழு முயற்சியுடன் தேடிய பொருளாதரத்துக்கு ஸகாத் கொடுக்கவில்லை என்பதற்காகவே இப்படியான தண்டனை என்றால் மற்றவர்களின் பொருளாதரத்தை எந்தவிதமான உரிமையும் இல்லாமல் திருமணத்தின் பெயரால் கொள்ளையடித்தால் அதற்குரிய தண்டனை அல்லாஹ்விடத்தில் எப்படி இருக்கும் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்த கொள்வார்கள்.
இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும். என கோஷங்கள் எழுப்பும் எத்தனை சகோதரர்கள் சொத்துரிமையை நிலை நாட்ட முயற்சித்தீர்களா?
வாரிசு சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு உங்களுக்கு தடைக்கல்லாக அமைந்த காரணம் என்ன?
இஸ்லாமிய தனியார் துறைச்சட்டத்தில் கூட முஸ்லிம்கள் தமது சொத்தை தனது மதத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கூட இருக்கிறதே?
இப்படியான சட்டங்களையே நடைமுறைப்படுத்தாமல் எப்படி ஒரு ஆட்சியை நோக்கி கற்பனை செய்கிறீர்கள? என வினாக்களைத் தொடுத்தால் அதற்கு இவைகளெல்லாம் சில்லறை பிரச்சினை என பதில் கூறுகின்றனர்.
ஒருவரின் சொத்தை தவறாக எடுத்தால் அவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை நபியவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்.
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
ஒருவரின் சொத்தில் ஒரு சிறியளவு நிலத்தை எடுதால் கூட அவரின் நிலை மறுமையில் எப்படி இருக்கும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறாரகள்.
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார் என ஸயீத் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள். (புகாரி)
சிறிய ஒரு நிலத்தைக்கூட மற்றவரின் சொத்தில் இருந்து தவறாக அபகரித்தால் இப்படி தண்டனை என்றால் தவறான அடிப்படையில் சீதனத்தின் பெயரால் அபகரிக்கப்படும் சொத்துக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
வாரிசு சொத்து சட்டத்தை யார் தன் விடயத்தில் நடைமுறைப்படுத்தவில்லையோ அவர் நிரந்தர நரகம் நுழைவார் என அல்லாஹ் தனது திருமறையில் பங்கிடும் முறைகளை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் பின்வருமாறு கூறுகிறான்.
''எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.'' (4:14)
இப்படி நிரந்தர நரகத்திற்க்குச் இட்டுகச் செல்லும் விடயமாக இது இருக்கிறது என்றால் இதில் ஒரு முஸ்லிம் எப்படி அல்லாஹ்வுக்கு அஞ்சி தனது நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்படி இனைவைத்தலை அஞ்சுகின்றோமோ அதேமாதிரி இந்த விடயத்திலும் எமது பயம் இருக்க வேண்டும்.
இன்று சமுகத்தில் நிகழக்கூடிய அதிகமான பாவங்களுக்கும் அடிப்படையாக இருப்பது தவறானசொத்துப் பங்கிடே. பெண்கள் வெளிநாடு செல்வதும், விபச்சாரம் சமுகத்திலே பெருகுவதும், பெண்சிசுக்கொலை அதிகரிப்பதும், பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் தங்கவைக்கப் படுவதும், பலர் தமது உயர்படிப்பை தொடரமுடியாமல் இருப்பதற்க்கும் காரணமாக இருப்பது இவ்வாறான தவறான சொத்துப் பங்கீடே என்பதை நிதானமாக சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்வர்.
ஒரு சமுகத்தில் என்ன பாவம் அதிகமாக நடக்கிறதோ அதை மையப் படுத்தியதாகவே தஃவாப் பணி அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அளவை நிறுவையில் மோசமாக ஒரு சமுகம் நடந்ததற்கு அவர்களைத் திருத்துவதற்காக ஒரு நபியை அனுப்பினான். அதேபோல் ஒழுக்கசீர்கேட்டில் வாழ்ந்த சமுகத்திற்கு லூத் நபியை அனுப்பி எச்சரித்தான். இவ்வாறே நபிமார்களின் தஃவாப்பணிகளும் அமைக்கப்பட்டன.
எனவே இக்காலத்தில் எமது பகுதிகளில் வாரிசுச் சட்டம் புறக்கணிக்கப்படுவதால் சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு எமது அழைப்புப்பணியில் பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை எமது மனதில் ஆழமாக பதித்து எமது நடவடிக்கையை மறுமைக்காக அமைத்துக் கொள்வோம். நாம் வெற்றி பெற அல்லாஹ் அருள்புரிவானாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001