நோன்பின் சிறப்புகள்
1- நோன்பு எனக்குரியது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 7492).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், முஸ்லிம் 2119).
2- நோன்பு ஒரு கேடயம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 7492).
3- நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உண்டு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்புத் துறக்கும் வேளையில் கிடைக் கின்ற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கின்ற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 7492).
4- கஸ்தூரியை விட சிறந்தது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்." (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 7492).
5- நோன்பாளிகள் மட்டும் நுழையும் சுவன வாயில் 'ரய்யான்':
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள்." (இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 2121).
6- அல்லாஹ்வின் பாதையில் நோற்கும் நோன்பின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்கும் அடியாரின் முகத்தை, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை.
(இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 2122).
7- இச்சையைக் கட்டுப்படுத்தும் நோன்பு:
"நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘‘யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்." எனக் கூறினார்கள் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் புஹாரி 1905)
8- நோன்புக்குக்கு நிகரான ஓர் வணக்கம் இல்லை:
"நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நற்செயலை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதற்கு நிகரான ஒன்றில்லை" என கூறினார்கள், அறிவிப்பவர்: அபூ உமாமா அல்பாஹிலிய் (ரலி) அவர்கள் (நஸாஈ 2223, அஹ்மத் 22149).
9- முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு:
"எவர் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 760).
10- பரிந்து பேசும் நோன்பு:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி அவர்கள், அஹ்மத் 6626). ஷைக் அல்பானி (ரஹ்) இச்செய்தியை ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.
11- நோன்பாளியின் பிரார்த்தனை மறுக்கப்பட மாட்டாது:
மூவரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படமாட்டாது: "1-நீதியான அரசன் 2- அநீதிக்குட்படுத்தப்பட்டவன் 3- நோன்பாளி நோன்பு திறக்கும் வரை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், திர்மிதி 3598)
12- சுவனத்தில் நுழைவிக்கும் வணக்கம்:
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்" என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார். (முஸ்லிம் 18).
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள். (முஸ்லிம் 1865)
பாக்கியமிகு ரமலானை அடைந்து நம்மீது கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்று இறை நெறுக்கத்தைப் பெற்ற அடியார்களாக மாறுவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!
கருத்துகள்
கருத்துரையிடுக