துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு&கூட்டுக் குர்பானியும் கூடாத குர்பானியும்

                   

1) துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல சந்தர்ப் பங்களை நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அந்த சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். இந்நாட்களின் சிறப்புகளை சொல்கின்ற பல குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் வந்துள்ளன.
1.விடியற்காலையின் மீது சத்தியமாக!
2.பத்து இரவுகளின் மீது சத்தியமாக! (89: 1,2)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: குறிப்பிட்ட நாட்கள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ( தஃப்ஸீர் இப்னு கஸீர் )
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
“(
துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களான) இந்த நாட்களில் செய்கின்ற எந்தச் செயலும் மற்ற நாட்களில் செய்யும் செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்.
இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விடவா? சிறந்தது என்று (நபித்தோழர்கள்) கேட்டார்கள். “(ஆம்) அல்லாஹ்வின் வழியில் போராடுவதை விட வும் சிறந்தது தான். எனினும் ஒரு மனிதர் தன்னையும், தன் பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணித்து வீர மரணம் அடைகிறாரோ அவரைத் தவிர” (அவரே மிகச் சிறப்புக்குரியவர்) எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு
                                                 (நூல் :புகாரி 969)
(துல் ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே தஹ்லீல்லாஇலாஹா இல்லல்லாஹ், தக்பீர்அல்லாஹ் அக்பர், தஹ்மீத் -அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத் 5575
இப்னு ஹஜர் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில்ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்பாகும். (ஃபத்ஹுல் பாரி : 2 / 534)
இந்நாட்களில் செய்ய வேண்டிய விரும்பத்தக்க அமல்கள்
a) தொழுகை
கடமையான வணக்கங்களை முற்படுத்துவதும் உபரியான வழிபாடுகளை அதிகப் படுத்துவதும் (அல்லாஹ்வின் பக்கம்) நம்மை நெருக்கி வைப்பதில் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்)செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, 
                                                   
நூல் : முஸ்லிம் 225
b) நோன்பு: 
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்எவரொருவர் அல்லாஹ்வுக்காக ஒரு நாளில் நோன்பு நோற்கின்றாரோ அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய முகத்தை நரகத்தை விட்டும் 70 வருட தொலை தூரத்திற்கு தூரமாக்குகிறான். 
அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு 
ஆதாரம்: முஸ்லிம் 2/808
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் சிலர் கூறினார்கள் 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல் ஹஜ் மாதம் 9 ஆம் (அரஃபா) நாள் முஹர்ரம் மாதம் 10வது நாள் (ஆஷூரா) மாதத்தில் 3 (12,13,14) நாட்கள் நோன்பு நோற்பார்கள். 
அறிவிப்பாளர்: ஹுனைதத் இப்னு காலித் ரழியல்லாஹு அன்ஹு 
நூல் : அஹ்மத் 22994
c) ஹஜ்ஜும் உம்ராவும் : 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் 
ஒரு உம்ரா மறு உம்ராவரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு 
நூல்: புகாரி 2 /629
d) தக்பீர் : 
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு ஆகிய இரு நபித் தோழர்களும் (துல் ஹஜ்)பத்து நாட்களிலும் கடை வீதிகளுக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். இவ்விருவரும் தக்பீர் கூறுவதை செவியுற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். 
புகாரி : 1/ 339
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மினாவில் தனது கூடாரத்தில் உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைக் கேட்ட பள்ளிவாசலில் உள்ளவர்களும், கடைத்தெருக்களில் உள்ளவர்களும் மினாவே அதிரும் அளவுக்கு தக்பீர் சொல்லுவார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மினாவில் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும், கூடாரத்திலும்,படுக்கையிலும், மஜ்லிஸிலும், அனைத்து நாட்களிலும் தக்பீர் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்…. 
நூல்: புகாரி 4/123. 
எனவே நாமும் இந்தக் காலகட்டத்தில் தொலைந்து விட்ட சுன்னாவை உயிர்ப்பிக்க தக்பீர் சொல்வது விரும்பத்தக்க செயலாகும்.
தக்பீரின் வாசகங்கள்:
الله أكبر، الله أكبر، الله أكبركبيرا
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீறா
الله أكبر. الله أكبر. لاإله إلا الله والله أكبر .الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹு
வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில் லாஹில் ஹம்து
الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله ، الله أكبر. الله أكبر. ولله الحمد
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து
3) அறஃபா நாளன்று நோன்பு வைப்பது: 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- 
அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அறஃ பா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து, இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான்.(அறிவிப்பவர் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: (முஸ்லிம்3354.)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறஃபா நோன்பை குறித்து கூறினார்கள் : 
அறஃபா நாளன்று நோன்பு வைப்பவருக்கு அந்நாளுக்கு முன் வருட பாவங்களையும், பின் வருட பாவங்களையும் அல்லாஹ் மன்னிப் பானென்று நம்பிக்கை கொள்கிறேன்”.
அறிவிப்பாளர்: அபூ கத்தாதா ரழியல்லாஹு அன்ஹு நூல் :முஸ்லிம் : 2803
குறிப்பு : ஹஜ் செய்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு இந்நோன்பு வலியுறுத்தப் பட் டுள்ளது.
4) துல் ஹஜ் 10 வது நாளின் சிறப்பு : 
முஸ்லீம்களில் அதிகமானவர்கள் இந்த நாளின் சிறப்பையும், அதன் மகத்துவத்தையும் உணராமல் இருக்கின்றார்கள் :குர்பானி நாள் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் அதுவே ஹஜ்ஜுல் அக்பர் நாளாகும். 
அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் குர்பானி நாள் (துல் ஹஜ் பத்தாவது நாள் ) பிறகு துல்ஹஜ் பதினோராவது நாள். ஆதாரம் : ஸுனன் அபூதாவூத் 1767
5)அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13)
தஷரீக்குடைய நாட்கள் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும் உரிய நாட்களாகும்என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பாளர் : நுபைஷா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 2 /109
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! 13:28
இந்நாட்களில் நோன்பு நோற்பது தடுக்கப் பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
யார் நோன்பு நோற்றுள்ளாரோ அவர் நோன்பை விடட்டும்.
                                               ஆதாரம் :அஹ்மத் : 28415
6) நன்மை தரும் நல் அமல்கள்
நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் 2:148
இந்த நாட்களில் அதிகமான நல் அமல்களில் ஈடுபட வேண்டும். உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவது, அல்லாஹ்வுக்காக குர்பானியை நிறைவேற்றுவது, அதிகமாக குர் ஆன் ஓதுவது, மனனம் செய்வது, ஓதத்தெரியாதவர்களுக்கு கற்றுக் கொடுப்பது, பாவமன்னிப்பு தேடுவது, பெற்றோர்களுக்கும், பெற்றோர்களின் நண்பர்களுக்கும் நன்மை செய்வது,
இரத்த பந்தங்களையும், உறவினர்களையும் ஆதரிப்பது, ஸலாத்தை பரப்புவது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, நாவைப் பேணுவது, அண்டை வீட்டார்களுக்கு உதவுவது, விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது, நடை பாதையில் மக்களுக்கு தொல்லை தருவதை அகற்றுவது,மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் செலவு செய்வது, அனாதைகளை அரவணைப்பது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவது, நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத் சொல்வது, பிரார்த்தனை செய்வது அப் பிரார்த்தனையில் பிற சகோதரர்களையும் இணைத்துக் கொள்வது, அமானிதங்களை பேணுவது, உடன்படிக் கைகளை நிறைவேற்றுவது, ஹறாமானவற்றிலிருந்து பார்வையை தாழ்த்திக் கொள்வது,ஒளுவை பரி பூரணமாக செய்வது, பாங்கிற்கும் இகாமத்திற்கும் மத்தியில் துஆ செய்வது, ஐவேளை தொழுகையும் பள்ளிவாசலுக்கு சென்று நிறைவேற்றுவது, தஹஜ்ஜத் மற்றும் உபரியான தொழுகைகளில் அதிக கவனம் செலுத்துவது. தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய திக்ருகளை ஓதுவது, காலை, மாலை திக்ருகளை செய்வது, முஸ்லீம்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் பங்கெடுப்பதுஇது போன்ற அனைத்து நல் அமல்களிலும் ஈடு பட்டு அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்று மறுமையில் சுவனத்தை அடைய முயற்சிப்போம்!
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம்புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம்புகாரி
இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!
மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
இப்படி ஆடு மாடுகளின் விலை ஆகாயத்தைத் தொட்டாலும், என்ன விலையேற்றமாக இருந்தாலும், எவ்வளவு விலை எகிறியிருந்தாலும் அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லிம்கள் தயங்குவதில்லை. அத்தனை விலை கொடுத்து வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை. வைக்கின்ற வைக்கோலுக்கும் புல் கட்டுக்கும் ஒரு தொகை காலியாகி விடுகின்றது.
அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து கட்டி, தீனி போட்டு, கஞ்சி ஊற்றி, கழனி வைத்துப் பராமரித்து வருவதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் அளவே இல்லை. கண்ட கண்ட இடங்களில் ஆடு மாடுகள் போடுகின்ற புழுக்கை, சாணி மற்றும் கழிக்கின்ற சிறுநீர் போன்ற அசுத்தங்களை அவ்வப்போது கழுவி துப்புரவு செய்கின்றனர். அதிலும் மழை நேரத்தில் நச நசவென்று ஒரே ஈரப் பதமாக இருக்கும் நாட்களில் இந்த அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்காகத் தாய்மார்கள் ஆற்றுகின்ற பணி சாதாரணமானதல்ல!
பிற மதங்களில் மாட்டு சாணம், மூத்திரம் போன்றவை புனிதம் என்று மதிக்கப்படுகின்றன. ஆட்டுப் புழுக்கையும், சிறுநீரும் கூட அவர்களிடம் அசுத்தமல்ல! ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவை அசுத்தமானவை. இந்த அசுத்தம் பட்ட இடங்கள் தொழுவதற்குத் தகுதியற்றவை. மேனியில், ஆடையில் பட்டால் கழுவாமல் தொழக் கூடாது என்ற கட்டுப்பாடு! அதனால் இந்த விஷயத்தில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள்.இத்தனை உழைப்பும் எதற்கு? இவ்வளவு தியாகமும் எதற்கு? தியாக வரலாற்றின் எதிரொலியாகத் தான்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்அல்குர்ஆன் 37:103-108
அல்லாஹ்வே பாராட்டுகின்ற இந்த மகத்தான சோதனையின் மறு பதிப்பு தான் குர்பானி!
இது எதை உணர்த்துகின்றது?
1. அல்லாஹ்வின் பாசத்திற்கு மேல் என்னுடைய பிள்ளைப் பாசம், குடும்பப் பாசம் மீறாது; மிகைக்காது என்பதற்காக, இப்ராஹீம் நபி நிகழ்த்திக் காட்டிய, உள்ளத்தை உலுக்குகின்ற ஓர் உன்னத நிரூபணம். நீர்த்துப் போகாது நெஞ்சில் நிலைத்திருக்கும் நினைவு ஆவணம்.
2. அறுத்துப் பலியிடுதல் என்பது ஒரு வணக்கம்! இதை அல்லாஹ்வுக்காகவே தவிர வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்ற படிப்பினையையும் இது உணர்த்துகின்றது.
ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
அல்குர்ஆன் 108:2
இந்த இரு பாடங்களைத் தான் இப்ராஹீம் நபியின் இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.
இப்ராஹீம் நபியவர்களின் அறுத்துப் பலியிடுதல் என்ற வணக்கம் மட்டுமல்லாது, அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்காகவே ஆகியிருந்தன. அந்த ஏகத்துவ வழியைத் தான் அவர்களது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களும், மற்றொரு மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழியில் வந்த அரபியர்களும் உருத் தெரியாமல் மாற்றி விட்டனர். மக்காவில் வாழ்ந்த மக்களிடம் இணை வைப்பு என்ற ஷிர்க் நுழைந்து விட்டது. இதைத் துடைக்கவும் தூரக் களைந்தெறியவும் அதே இப்ராஹீம் நபியின் சந்ததியில் வந்தவர்கள் தான் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.இதோ அம்மக்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எதிர் கொண்ட இணை வைப்பு என்ற நோயின் வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான்.
அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.அல்குர்ஆன் 17:46
அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.அல்குர்ஆன் 39:45
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.அல்குர்ஆன் 22:37
அல்லாஹ்வும் ஆடு, மாடு, ஒட்டகங்களின் இறைச்சி தேவையில்லை. இறையச்சம் தான் தேவை என்று கூறுகின்றான்.
இறையச்சம் என்றால் என்ன?
ஒரேயொரு இறைவனை மட்டுமே வணங்குவது தான் இறையச்சம்!
நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?” என்று கேட்டார்.
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள்இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லைஎன்றனர்.      அல்குர்ஆன் 23:23, 24
இதுபோன்ற வசனங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது தான் இறையச்சம் என்று குறிப்பிடுகின்றன. இறையச்சம் என்றால் உடல் நடுங்கி, அஞ்சி, அல்லாஹ்வைத் தொழுது, சில வணங்கங்களைச் செய்வது மட்டும் தான்
இதே அடிப்படையில் உங்களுடைய இறைச்சியும், இரத்தமும் தேவையில்லை, இறையச்சம் தான், அதாவது ஏகத்துவம் தான் தேவை என்று அல்லாஹ்வும் அடித்துச் சொல்லி விட்டான்.
எனவே குர்பானி கொடுத்தால் மட்டும் போதாது. ஏகத்துவவாதியாக மாற வேண்டும். அப்போது தான் நமது குர்பானி ஏற்றுக் கொள்ளப்படும்.
கூட்டுக் குர்பானியும்  கூடாத குர்பானியும்                                                          இறைவனின் திருப்தியை பெற செய்யப்படும் காரியங்களில் கூட்டுக் குர்பானியும் ஒன்று  இன்று இந்த குர்பானி என்ற இபாதத் கூட நம் சமூகத்தில் பெருமைக்காகவும் புகழுக்காகவுமே செய்யப் படுகின்றதுகடந்த வருடம் என் அண்ணண் கொடுத்த குர்பானியை விட நான் இவ்வருடம் கொழுத்த ஆட்டை குர்பானி கொடுப்பேன்  கொம்பு வலைந்த ஆட்டை கொடுப்பேன் சீறிப் பாயும் காளையை கொடுப்பேன் என்றெல்லாம் இபாதத்தை நிறை வேற்றுவதில் பெருமை தலை விரித்தாடுகின்றதுஇது போன்ற எந்த குர்பானியையும் இறைவன் அங்கீகரிக்க மாட்டான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ,அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லைஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்குவசப்படுத்திக்கொடுத்திருக்கிறான்ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
                       கூட்டுக் குர்பானி என்றால் என்ன?                                                         குர்பானி என்பது வசதியானவர்களின் மீது மட்டும் கடமை என்று இருந்தாலும் அந்த குர்பானியின் நன்மையில் நாமும் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கும் நடுத்தரமானவர்கள் சிலர்கள் சேர்ந்து குர்பானி கொடுப்பதே கூட்டுக் குர்பானியாகும் 
ஆனால் நம் சமூகத்தில் இந்தக் கூட்டுக் குர்பானியில் முழு ஆட்டையோ அல்லது மாட்டையோ தருவதற்க்கு வசதி படைத்தோரும் பங்கு பெறும் சூழலைப் பார்க்கின்றோம் இதற்க்கு மார்க்கத்தில் வழி காட்டல்கள் இல்லைஅந்த ஜமாத்தை விட எங்கள் ஜமாத் இந்த வருடம் 50- காளையை குர்பானி கொடுக்கும் என்று பெருமைக்காக குர்பானியை கொடுக்கும் ஜமாத் நிர்வாகிகளே இது போல் வசதியானவர்களையும் கூட்டாக வேண்டும் நிர்பந்திக்கின்றனர் ஒவ்வொரு இயக்கத்தவர்களும் வசதியான ஒருவரையே தொடர்ந்து அணுகும் போது அந்த வசதியானவர் ஒரு காளையை குர்பானி கொடுப்பதற்க்கு பதிலாக ஏழு இயக்த்தவர்களோடு குர்பானியில் இணையும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகின்றார் இந்த மோசமான நிலையும் மாற்றப் பட வேண்டும் காரணம் இந்தக் கூட்டுக் குர்பானி சில வேலை நமது தவறான எண்ணங்களால் கூடாத குர்பானியாகவும் மாறிவிடலாம்
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
- ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
- ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
- மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும்(முஸ்லிம்)
- ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
- அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறைஉழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது.
ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)நூல் : நஸாயீ (2373)
.மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட குறிப்பாக துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.
இதில் கூறப்படும் பத்து நாட்கள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களையே குறிக்கும். பத்தாவது நாள் பெருநாள் என்பதால் அன்று நோன்பு நோற்பது கூடாது.இந்த ஒன்பது நாட்கள் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு இவ்வாறு நோன்பு நோற்பது கூடாது என்று சொல்ல முடியாது.
ஒரு அமலுக்கு நபிகளாரின் சொல் ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் அந்த வணக்கத்தை நபிகளார் செய்ததாக எந்தச் செய்தியும் இல்லை. இந்நிலையில் நபிகளாரின் செயல் இல்லாவிட்டாலும் சொல் இருப்பதால் அந்த அமல் நபிவழியாக கருதப்படும்.
உதாரணமாக அரஃபா நாளில் நோன்பு நோற்பதற்கு நபிகளாரின் சொல்லில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்பு நோற்றதாக எந்தச் செய்தியும் இல்லை. இப்போது இந்த நோன்புக்கு நபியின் செயல் ஆதாரமாகக் கிடைக்காவிட்டாலும் சொல் கிடைத்திருப்பதால் இது மார்க்க அங்கீகாரம் பெறுகின்றது.
துல்ஹஜ் மாதம் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பதையும் இதே அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அமலைச் செய்யவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் செய்யாவிட்டாலும் நாம் செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இந்த நாட்களில் நோன்பு நோற்பது கூடாது என்ற கருத்தைத் தராது. ஏனென்றால் இந்த நாட்களில் நோன்பு உட்பட நல்லறங்களை அதிகமாகச் செய்வது கட்டாயம் அல்ல. இவற்றைச் செய்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டுவிட்டால் குற்றமில்லை. இந்த அனுமதியின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் விட்டிருக்கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001