முஸ்லிம் சமூகத்தில் பெருகும் விவாகரத்துகள் & தீர்வுகள் .
அல்குர்ஆனில்
அல்லாஹ் கூறுகிறான்:
وَمِنْ آيَاتِهِ
أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ
بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ
يَتَفَكَّرُونَ
"நீங்கள் அவற்றுடன் அமைதிபெறும் பொருட்டு உங்களிலிருந்தே
உங்களுக்குத் துணைகளை அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே
அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய
அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்குப் பல
அத்தாட்சிகள் இருக்கின்றன." (அல்குர்ஆன் 30:21)
அல்லாஹ் திருமண
வாழ்க்கையை மூன்று முக்கியத் தூண்களின் மீது எழுப்பியிருக்கிறான்:
1.
ஸகீனத் (மன அமைதி - لِّتَسْكُنُوا
إِلَيْهَا)
2.
மவத்தத் (அன்பு - مَّوَدَّةً)
3.
ரஹ்மத் (கருணை - رَحْمَةً)
ஆனால், இன்றைய தற்கால முஸ்லிம் சமுதாயத்தில் இந்த மூன்று தூண்களும் சரிந்து, விவாகரத்துகள் (Divorce) மற்றும் குடும்பப்
பிரிவினைகள் ஒரு தொற்றுநோய் போல பரவி வருவது கவலையளிக்கும் எதார்த்தமாக
மாறியுள்ளது.
1. தற்போதைய சமூக சூழ்நிலைகளும் புள்ளிவிவர எச்சரிக்கையும்
இன்றைய சூழ்நிலையை
நாம் வெறும் பேச்சாகக் கடந்துவிட முடியாது. புள்ளிவிவரங்கள் நமக்கு ஆபத்தை
எச்சரிக்கின்றன.
நிலுவையில் உள்ள
வழக்குகள் (Pending Cases)
தமிழ்நாட்டில் உள்ள 40 குடும்ப நீதிமன்றங்களில்
(Family Courts) 33,200-க்கும் மேற்பட்ட விவாகரத்து
வழக்குகள் தீர்ப்பிற்காகப் நிலுவையில் உள்ளன.
வழக்குகளின் தாமதம்: இதில் பல வழக்குகள் 5 முதல்
10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன.
ஆண்டுதோறும் புதிய வழக்குகள்: சென்னையில்
ஆண்டுக்குச் சுமார் 4,000 முதல் 5,000 வரை புதிய விவாகரத்து வழக்குகள் தாக்கல்
செய்யப்படுகின்றன.
சென்னை நிலவரம்: தலைநகர் சென்னையில் மட்டும் 8 குடும்ப நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வழக்கின் எண்ணிக்கை
அதிகமாக இருப்பதால் கூடுதல் குடும்ப நீதிமன்றங்களை அமைக்கக் கோரிக்கைகள்
எழுந்துள்ளன.
பரஸ்பர சம்மதம் (Mutual Consent): நீதிமன்றத்தை
அணுகும் பெரும்பாலான இளம் தம்பதியினர் நீண்டகால வழக்குகளைத் தவிர்த்து, பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதையே விரும்புகின்றனர்.
சென்னை பூங்கா நகர் (Park Town) வளாகத்தில்
இயங்கும் 8 குடும்ப நீதிமன்றங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான
விவாகரத்து மற்றும் குடும்பச் சண்டை சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு முழுமைக்கும்: மாநிலம் முழுவதும் உள்ள குடும்ப
நீதிமன்றங்களில் மொத்தமாக 31,000 முதல் 33,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையின் பங்களிப்பு: இந்த மொத்த நிலுவை வழக்குகளில் கணிசமான
பங்கு (சுமார் 25% முதல் 30% வரை)
சென்னை மாநகரக் குடும்ப நீதிமன்றங்களைச் சேர்ந்தவை என்பதால், இங்கு மட்டும் 8,000 முதல் 10,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு கட்டங்களில் (விசாரணை, சாட்சியம், தீர்ப்பு) நிலுவையில் இருந்து வருகின்றன.
பரஸ்பர சம்மத வழக்குகள் (Mutual
Consent): இதில் 40% - 50% வழக்குகள்
இருதரப்பு பரஸ்பர சம்மதத்துடன் தாக்கல் செய்யப்படுபவை. இவை
வழக்கமாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டுக்குள்
விரைவாக முடித்து வைக்கப்படுகின்றன.
ஒருதரப்பு வழக்குகள்
(Contested Divorce): கொடுமைப்படுத்துதல்.
(Cruelty),
பிரிந்து வாழ்தல் (Desertion) அல்லது
கள்ளத்தொடர்பு போன்ற காரணங்களால் ஒருவர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகள் 3
முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கின்றன.
சமீபத்திய சமூக மாற்றங்கள் & புதுப் போக்குகள்
(2025-2026 Trends)
வயதான
தம்பதியரின் விவாகரத்து
(Grey
Divorce):
சமீபகாலமாக 50 வயதைக் கடந்த தம்பதியினர்
விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகும் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்து வருவதாக
வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிள்ளைகள் வளர்ந்து
சொந்தக் காலில் நின்ற பிறகு, மன அமைதிக்காகப் பிரிய
முன்வருகின்றனர். பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் விழிப்புணர்வு: பெண்களின் நிதிச்
சுதந்திரம் மற்றும் சட்ட விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், ஒத்துவராத
திருமண பந்தத்திலிருந்து வெளியேறும் மனப்பான்மை சென்னை போன்ற பெருநகரங்களில்
அதிகமாகக் காணப்படுகிறது
முஸ்லிம் தம்பதியரின்
வழக்குகள்: சுமார் 5% முதல் 8% வரை
(தோராயமாக 500 முதல் 800 வழக்குகள்)
குடும்ப நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு
(2023
- 2026 தாக்கம்)
2023-ஆம்
ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு,
தற்போதைய (2025–2026) வழக்குகளின்
எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது:தீர்ப்பு: "தனியார்
ஜமாஅத்துகள் அல்லது ஷரீஅத் கவுன்சில்கள் வழங்கும் 'குலா'
(Khula) விவாகரத்து சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது. பெண்
விவாகரத்து (குலா) பெற விரும்பினால் நீதிமன்றத்தை மட்டுமே அணுக வேண்டும்"
என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விளைவு: இதன் காரணமாக, கடந்த 2-3 ஆண்டுகளில் சென்னை குடும்ப
நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் தாக்கல் செய்யும் 'குலா'
மனுக்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது.
குடும்ப நல
நீதிமன்றங்கள் மற்றும் இஸ்லாமிய ஷரீஅத் கவுன்சில்களின் தரவுகளின்படி:
- கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விவாகரத்து கோரி வரும் தம்பதியரின் எண்ணிக்கை 300% வரை அதிகரித்துள்ளது.
- இளம் தம்பதியினர் பாதிப்பு: விவாகரத்து செய்பவர்களில் 70% க்கும்
அதிகமானோர் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். திருமணம்
முடிந்து 1 முதல் 3 ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்யும் அவசரம் இன்று அதிகரித்துள்ளது.
- அதிகரிக்கும் குலாஹ் (Khula): ஆண்கள் தலாக் சொல்வதை விட, பெண்கள்
விவாகரத்து (Khula) கோரி விண்ணப்பிக்கும் விகிதம்
நகர்ப்புறங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. இது
சமுதாயத்தில் குடும்பப் புரிதலில் ஏதோ ஒரு பெரிய விரிசல் விழுந்திருப்பதை
உணர்த்துகிறது.
இவ்வாறு இரு மடங்காக, மும்மடங்காக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது. இந்த எண்ணிக்கை நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள் மட்டுமே! நீதிமன்றம்வரை வராமல் சுமுகமாக முடிக்கப்படும் விவாகரத்துகள், பஞ்சாயத்துகளில், அல்லது ஜமாஅத்துகளில் நடக்கும் விவாகரத்துகள் முதலானவற்றைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கில் இருக்கக்கூடும்; லட்சத்தை எட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
சுருங்கக்கூறின், எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் இருக்க வேண்டிய நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி, முறுவல்… என எதுவும் இல்லை. ஆனால், பற்றாக்குறையே வாழ்க்கையாக மாறிவிட்டிருந்த முந்தைய தலைமுறையினரிடம் இந்த நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருந்ததில்லை. காரணம் என்ன?
வாழ்க்கைப் பாடம்
படிப்பறிவு இல்லாத, அல்லது குறைவான படிப்பே இருந்த அம்மக்களிடம் பண்பாடு இருந்தது; நிதானம் இருந்தது. எதார்த்த வாழ்க்கை என்ன? குடும்பக் கௌரவம் என்ன என்பதையெல்லாம் அவர்கள் அறிந்திருந்தார்கள். குடும்பம் சிதறிவிடக் கூடாது; கட்டுக்கோப்பு குலைந்துவிடக் கூடாது என்பதற்காக உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள்; கடமையில்லாத தைக்கூட இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்கள் பள்ளிப் பாடம் இல்லையே தவிர, வாழ்க்கைப் பாடம் அவர்களின் விரல் நுனியில் இருந்தது.
இன்றைய இளைய தம்பதியரிடையே மருந்துக்குக்கூட சகிப்புத் தன்மையைப் பார்க்க முடியவில்லை. சுயநலம் ஒன்றைத் தவிர, குடும்பத்தின் வேறு எந்த அடிப்படையும் அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றுவதில்லை. எதிலும் அவசரம்! எதையும் உடைத்துவிடும் வறட்டுத் துணிச்சல்! தன் சுகத்தைத் தவிர, எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் சிந்திக்காத ஏகாந்த நிலை! அவர்களின் ஏட்டுப் படிப்பு, பணம் சம்பாதிக்க உதவுவதைப் போன்று, சம்பாதித்த பணத்தில் நிம்மதியாக வாழ கற்றுக்கொடுக்கவில்லை.
திருமணம்
முதலில் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது, ஒரு வலுவான ஒப்பந்தம்; அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற, நீடித்திருக்க வேண்டிய புனித இணைப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஆகும். அதை எளிதில் அறுத்தெறியக் கூடாது.
وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
“அவர்கள் உங்களிடமிருந்து வலுவானதோர் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்” (4:21) எனத் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அதாவது கணவனை மனைவியுடன் பிணைக்கும் உறுதியான, மிக வலுவான ஒப்பந்தத்தைப் பெண்கள் தம் கணவன்களிடமிருந்து திருமணத்தின் மூலம் பெற்றுள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும் ஹஜ்’ஜின்போது ஆற்றிய பேருரையில், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தே அவர்களைக் கரம் பிடித்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் ஆணையின்பேரிலேயே அவர்களின் கற்புக்கு உரிமை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
ஆக, அல்லாஹ்வை முன்வைத்து செய்தகொள்ளப்பட்ட மண ஒப்பந்தத்தைப் பெரிதும் மதித்து நடக்க வேண்டும்! தகுந்த காரணமின்றி அதை முறித்துப் போட்டுவிடலாகாது. தகுந்த காரணமே இருந்தாலும்கூட, இயன்றவரை முறிக்காமலிருக்க வழியேதேனும் உண்டா என்றே பார்க்க வேண்டும்.
இதனாலேயே, மணஒப்பந்தத்தை முறிக்கும் மணவிலக்கை (தலாக்), அனுமதிக்கப்பட்ட ஹலால்களிலேயே இறைவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(அபூதாவூத்)
விவாகரத்துகள் பெருகுவதற்கான
ஆழமான காரணங்கள் (Root
Causes)
மணமுறிவு ஏன்?
முதலில், மணவிலக்கு என்ற எண்ணம் வந்ததனாலேயே அந்த முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதக் கூடாது.
ஏதோ ஒரு மருட்சி; அல்லது அழுத்தம் அந்த எண்ணம் தோன்றக் காரணமாகஇருந்திருக்கலாம். அதனால், அதற்குக் காரணம் என்ன என்று அலசவேண்டும். கணவனாகட்டும்;மனைவியாகட்டும்! மணவிலக்கு எண்ணம் பிறக்கக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்னென்னஎன்பதை நிதானமாக
அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.
அதாவது பிரிந்துவிடவேண்டும் என்ற உந்துதல் தம்பதியருக்குப் பிறக்கத் தூண்டுகோலாக அமைந்தஅகக் காரணிகள்
என்ன? புறக் காரணிகள் என்ன என்று அமைதியாக யோசித்துப்பார்க்க வேண்டும்.அக்காரணிகள் ஏன் இவையாக இருக்கக் கூடாது!
1. தம்பதியரில் ஒருவர் மற்றவரின் உரிமையை மதிப்பதில்லை. இதையே, அவர் தமதுகடமையை உணரவில்லை என்றும் சொல்லலாம்! ஒருவரின் உரிமைதான் மற்றவரின்கடமையாகிறது.
2. ஒருவர் தமது உரிமைக்கு மேலாக மற்றவரிடம் எதிர்பார்ப்பது, அதாவது மற்றவர்மீதுகடமையில்லாத ஒன்றைக் கடமைபோல் திணிப்பது.
3. ஒருவருக்கொருவர் தம் உணர்வுகள், ஆசாபாசங்கள், தேவைகள், உடல் உபாதைகள்,மனஅழுத்தம், பற்றாக்குறை ஆகியவற்றைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.
4. இதனால்தான், தம்பதியர் மனம் திறந்து பேச வேண்டும்; அவர்களுக்கிடையில் ஒளிவுமறைவுஇருக்கக் கூடாது என்கின்றனர். அதே நேரத்தில், வெளிப்படுத்தும் விதம் காயப்படுத்தாததாக,பக்குவமானதாக இருத்தல் அவசியம்.
5. ஒருவருக்கு மற்றவர்மேலுள்ள அவநம்பிக்கை, கோபம், சந்தேகம், தவறான எண்ணம்ஆகியவையே பெரும்பாலும் பிரிவுக்குக் காரணிகளாகிவிடுகின்றன.
இவற்றைக் களையஇருவருமே முயல்வதில்லை;
அல்லது ஒருவர் முயன்றால், மற்றவர் வாய்ப்பளிப்பதில்லை
. یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ ؗ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ “எண்ணங்களில் சில பாவமாகும்” (49:12) என்கிறான்
இறைவன்.
1) ஈகோ மற்றும் சகிப்புத்தன்மை இல்லாமை
(Ego & Lack of Sabr)
முந்தைய
தலைமுறையில் "குடும்பம்" முக்கியமாக இருந்தது. இன்று "எனது
வாழ்க்கை, எனது உரிமை" என்ற
மேற்கத்திய தனிமனித வாதச் சிந்தனை புகுந்துவிட்டது. சிறு கருத்து வேறுபாடு வந்தால்
கூட, சகிப்புத்தன்மை (ஸப்ர்) முற்றிலும் குறைந்து, கணவன்-மனைவி இருவரிடமும்
ஈகோ தலைதூக்குகிறது.
தம்பதியருக்குள்
கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கைதான். ஆனால் அதை எப்படி கையாண்டார்கள் என்பதற்கு
நபித்தோழர்களின் வாழ்வில் அழகிய உதாரணங்கள் உள்ளன:
அலி (ரலி) - பாத்திமா
(ரலி) அவர்களின் ஊடல் (மன்னிப்பும் விட்டுக்கொடுத்தலும்)
ஒருமுறை அலி
(ரலி) அவர்களுக்கும், நபிகளாரின் மகள் அன்னை பாத்திமா
(ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோபமடைந்த அலி
(ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, மஸ்ஜிதுந்
நபவியின் தரையில் படுத்து உறங்கிவிட்டார்.
நபி (ஸல்)
அவர்கள் மகளின் வீட்டிற்கு வந்து அலியைக் காணாது தேடி மஸ்ஜிதுக்கு வந்தார்கள்.
அங்கே அலி (ரலி) அவர்களின் ஆடையில் மண் படிந்த நிலையில் உறங்குவதைக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அலியின் மீதுள்ள மண்ணைத் தட்டிவிட்டு, அன்போடு "அபூ துராப்
(மண்ணின் தந்தையே) எழும்புங்கள்!" என்று
அழைத்து, சிரித்துக் கொண்டே இருவரையும் சேர்த்து
வைத்தார்கள்.
(நூல்:
புகாரி)
பாடம்: கணவன்-மனைவிக்குள் சண்டை வந்தால் அதை ஈகோவாக மாற்றாமல், பெரியவர்கள் அன்பான முறையில் சேர்த்து வைக்க வேண்டுமே தவிர, சண்டையை பெரிதாக்கக் கூடாது.
2) சமூக ஊடகங்களின் தவறான தாக்கம் (Social Media &
Infidelity)
ஸ்மார்ட்போன்களும், சமூக வலைத்தளங்களும் (WhatsApp, Instagram, Facebook) இன்று பல குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.
- போலி ஒப்பீடு: இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதிவிடும் போலி மகிழ்ச்சியான
வாழ்க்கையைப் பார்த்து விட்டு, தன் நிஜ வாழ்க்கை
துணையை குறைத்து மதிப்பிடுவது.
- நம்பிக்கைத் துரோகம்: அறிமுகமில்லாத நபர்களுடன் சமூக
வலைத்தளங்களில் பேசத் தொடங்கி, அது நாளடைவில்
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தவறான தொடர்புகளாக (Infidelity -
18.4%) மாறி குடும்பங்களை உடைக்கிறது.
3) பொருளாதார ஆடம்பரமும் ஆடம்பர மோகமும் (Consumerism
& Debt)
தேவைகளைத் தாண்டி ஆடம்பரமாக வாழ ஆசைப்படுவது மற்றும் மற்றவர்களைப் போல வாழ
வேண்டும் என்பதற்காக கிரெடிட் கார்டு கடன்களில் மூழ்குவது. இதனால் ஏற்படும் மன
உளைச்சல் கணவன்-மனைவி இடையே தினசரி சண்டையாக வெடிக்கிறது.
4) பெற்றோர்களின் முதிர்ச்சியற்ற தலையீடு
திருமணம் முடிந்த பின்பும் மகனையோ அல்லது மகளையோ தங்களது முழுக்
கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் பெற்றோர்கள். கணவன்-மனைவிக்குள் நடக்கும் சிறியப்
பிரச்சினையை இருவீட்டுப் பெரியவர்களும் முதிர்ச்சியில்லாமல் பேசி பெரிதாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்று
விடுகிறார்கள்.
மணவிலக்கின் பின்விளைவுகள்
சரி! அப்படியே பிரிந்துவிடுவது எனத் தம்பதியர் இருவரும் மனதளவில் முடிவெடுத்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போதுகூட, சில உண்மைகளை அவர்கள் சீர்தூக்கிப்பார்த்தால், மணவிலக்கு எவ்வளவு கசப்பானது என்பது புரியும்.
மணவிலக்கிற்குப்பின் ஒரு சுமுகமான வாழ்வு அமைவதென்பது சுலபமான காரியமல்ல. வீட்டையோ வாகனத்தையோ வேலைபார்க்கும் இடத்தையோ நினைத்தவுடன் மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல, வாழ்க்கைத் துணையை மாற்றுவதென்பது. அதிலுள்ள சுடுகின்ற எதார்த்தங்களை இதோ எண்ணிப்பாருங்கள்!
1. தம்பதியரில் இருவருக்குமோ, அல்லது இருவரில் ஒருவருக்கோ பிரிவுக்குப்பின் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் நேரலாம். மறுமணம் என்பது எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தனிமை, மனிதனைக் குற்றம் செய்யத் தூண்டலாம். கேள்வி கேட்பதற்கு ஆளில்லை என்ற துணிச்சலே மனிதனைப் படுகுழியில் தள்ளிவிடும்.
அவ்வாறே தனிமை, மனஅழுத்தத்தையும் விரக்தியையும் தரவல்லது. கண்டதையும் சிந்தித்தே உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக்கொள்ள நேரும். வேண்டாத நட்பையும் தீய பழக்கங்களையும் தனிமை தேடிக் கொடுத்துவிட அதிக வாய்ப்பு உண்டு.
2. இதையெல்லாம்விட, கணவன் – மனைவி இடையிலான பிரிவு குழந்தைகளைப் பாதிப்பதுதான் மிகவும் கொடுமை. தாயின் அன்பு, அல்லது தந்தையின் பரிவு, அல்லது இரண்டுமே கிடைக்காத துர்நிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடும்.
ஆம்! தாய், தந்தை இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் நெருக்கடியைக் குழந்தைகள் சந்திப்பார்கள். இரு கண்களில் எந்தக் கண் வேண்டும் என்று கேட்பதற்குச் சமம் இது. குழந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவர்களின் அரவணைப்பு கிடைக்கலாம்; அந்த அரவணைப்புகூட எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவரை அவ்வப்போதுதான் பார்க்கவே முடியும்; சில வேளைகளில் பார்ப்பதற்குக்கூட தடை வரலாம்!
பெற்றோரின் பிரிவைச் சரிவர புரிந்துகொள்ளாத குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப் படுவர். அந்த ஏக்கம் வெறியாக மாறி, பெற்றோருக்கெதிராகத் திரும்பினாலும் வியப்பதற் கில்லை. முறையான வளர்ப்பும் இயல்பான அன்பும் கிடைக்காதபோது குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறவும் இடமுண்டு.
3. விவாகரத்து ஏற்பட்டால் பொருளாதாரச் செலவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. விவாகரத்து வழக்கு நீதிமன்றம்வரை செல்லக்கூடும். அப்போது கணவன் – மனைவி இருவர் தலையிலும் நீதிமன்றச் செலவுகள், வழக்குரைஞர் கட்டணம் முதலான செலவுகள் விழும்.
மனைவியின் ‘இத்தா’ காலத்திற்குக் கணவன் தனியாக ஜீவனாம்சம் கொடுத்தாக வேண்டும். மனைவிக்கும் கணவனுக்கும் சொந்தமான சொத்துகள், உடைமைகள் ஆகியவை கலந்துபோயிருந்தால், அவற்றைத் தனித்தனியாககப் பிரித்து உரியவருக்கு ஒப்படைத்தாக வேண்டும். அதில் இருவருக்குமிடையே பிரச்சினை தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.
சுமுகமாகவே பிரித்துக்கொண்டாலும், ஒன்றாக இருந்த சொத்து, ஆளுக்கு இவ்வளவு எனப் பிரியும்போது பலம் குன்றத்தானே செய்யும்! வசதிகள் குறையத்தானே செய்யும்! மணவிலக்கும் பிரிவும்தானே இதற்குக் காரணம்! சேர்ந்து வாழ்ந்தால் இதற்கு இடமில்லையே!
தீர்வுகள்
அல்குர்ஆனும்
ஹதீஸும் காட்டும் தீர்வுகள்
இஸ்லாம்
விவாகரத்தை முற்றிலும் தடை செய்யவில்லை. ஏனெனில் சில சூழ்நிலைகளில் அது தவிர்க்க
முடியாததாகிவிடுகிறது. ஆனால், மாநபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
عن ابن عمر عن النبي قال: أبغض الحلال إلي الله الطلاق – ابوداوود
"அல்லாஹ்வினால் அனுமதிக்கப்பட்ட காரியங்களில் அவனுக்கு மிகவும் கோபமூட்டக்கூடிய
காரியம் விவாகரத்து (லாக்) ஆகும்." (நூல்: அபூதாவூத்)
எனவே, எடுத்தவுடனே விவாகரத்து என்ற முடிவுக்குச் செல்லாமல், இஸ்லாம் கூறும் படிநிலைகளை நாம் பின்பற்ற வேண்டும்:
இஸ்லாமியக்
குடும்ப வாழ்க்கையில் மனமுறிவைத் தடுப்பதற்கும், அமைதி
நிலைப்பதற்கும் மிக முக்கிய அடித்தளமே ‘தக்வா’
(இறைஅச்சம்) தான்.
அல்லாஹ்
குர்ஆனில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பேசும் பெரும்பாலான இடங்களில் தக்வாவைத்
தான் முதன்மையான நிபந்தனையாக வைக்கிறான். தக்வா இருக்கும் இடத்தில் கோபமும்
அநீதியும் இருக்காது; விட்டுக்கொடுத்தலும் அன்பும் மட்டுமே
இருக்கும்.
குர்ஆனின்
அடிப்படையில் ‘தக்வா’வை முதன்மையாகக் கொண்டு மனமுறிவைத்
தடுப்பதற்கான வரிசைப்படுத்தப்பட்ட அழகிய தீர்வுகள்
1. தக்வா (இறைஅச்சம்) – அடித்தளம்
குடும்ப
வாழ்க்கையைத் தொடங்குவதிலும், பிரச்சனைகளைக் கையாள்வதிலும் முதல்
படி தக்வா. தன் துணையைக் கண்காணிப்பதை விட, "அல்லாஹ்
என்னைக் கண்காணிக்கிறான்; நான் என் துணைக்கு அநீதி இழைத்தால்
அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்" என்ற பயமே மனமுறிவைத் தடுக்கும் முதல்
கேடயம்.
یٰۤاَیُّهَا
النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ
وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ
وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ
كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا
"மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (தக்வா செய்யுங்கள்)...
மேலும் எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் உரிமைகளைக் கேட்கிறீர்களோ அந்த
அல்லாஹ்வுக்கும், (உறவின்) இரத்த பந்தங்களுக்கும் அஞ்சிக்
கொள்ளுங்கள்." (4:1)
2.குறைகளைப்
பொறுத்துக் கொள்ளுதல் (நிறைகளைப் பார்த்தல்)
துணையிடம் ஏதேனும்
ஒரு குறை இருந்தால், அவசரப்பட்டு வெறுக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்:
وَعَاشِرُوهُنَّ
بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا
وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
"அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள். நீங்கள் அவர்களை
வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ்
ஏராளமான நன்மைகளை வைத்திருக்கக்கூடும்." (அல்குர்ஆன் 4:19)
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لَا يَفْرَكْ
مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
"நம்பிக்கையாளரான எந்த ஒரு கணவனும் நம்பிக்கையாளரான தன்
மனைவியை வெறுக்க வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் மற்றொரு குணத்தைக்
கண்டு அவன் திருப்தி கொள்வான்." (நூல்: முஸ்லிம்
3. 'மவத்தா' மற்றும் 'ரஹ்மா' (அன்பும் இரக்கமும்)
தக்வா உள்ள
ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பையும் இரக்கத்தையும் பொழிவார்களே தவிர, வன்மத்தையோ கோபத்தையோ வளர்க்க மாட்டார்கள்.
குர்ஆன்
வசனம் (30:21):
"நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே துணைகளை உருவாக்கி, உங்களுக்கு இடையே அன்பையும் இரக்கத்தையும் தோற்றுவித்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளதாகும்."
4. 'இஹ்சான்' (நன்மையையும்
நல்ல குணத்தையும் கடைப்பிடித்தல்)
ஒருவரிடம் குறைகள்
இருந்தாலும், தக்வா உள்ளவர் கோபப்படாமல் அவர்களின் நல்ல
குணங்களை எண்ணிப் பார்த்து சகிப்புத்தன்மையுடன் பெருந்தன்மையாக நடப்பார்.
فَاِنْ
كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ
خَیْرًا كَثِیْرًا ۟
"அவர்களுடன் நன்முறையில் (இஹ்ஸானுடன்)
குடும்ப நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள்
ஒன்றை வெறுக்கக்கூடும்; ஆனால் அல்லாஹ் அதில் ஏராளமான
நன்மைகளை வைத்திருக்கக்கூடும் குர்ஆன்
வசனம் (4:19): ."
5. 'நஸீஹத்'
(தக்வாவுடன் கூடிய அன்பான அறிவுரை)
பிரச்சனை வரும்போது தக்வாவைக் கொண்டு அன்பாக நஸீஹத்
(அறிவுரை) செய்ய வேண்டும். ஒருவரையொருவர் தாழ்த்திப் பேசுவதோ, அசிங்கப்படுத்துவதோ கூடாது.
وَالّٰتِیْ
تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ
"எந்தப் பெண்கள் மாறு செய்வார்களோ என்று
நீங்கள் பயப்படுகிறீர்களோ, அவர்களுக்கு (அன்போடு) அறிவுரை கூறுங்கள்..." குர்ஆன்
வசனம் (4:34
6. 'ஸப்ர்'
& 'இஸ்லாஹ்' (சகிப்புத்தன்மை &
சமாதானம்)
தக்வா உள்ளவர்கள் தன் சுயமரியாதையை விடக் குடும்பத்தின்
அமைதிக்காகத் தன் உரிமைகளைச் சற்று விட்டுக்கொடுத்துச் சமாதானமாகி விடுவார்கள்.
فَلَا
جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَیْرٌ
"...அவ்விருவரும் தங்களுக்குள் சமாதானம்
செய்துகொள்வது குற்றமில்லை. சமாதானமே மிகவும் மேன்மையானது." குர்ஆன்
வசனம் (4:128):
7. 'ஹகம்'
(தக்வாவுள்ள நடுவர் மூலம் தீர்வு)
பிரச்சனை பெரிதானால், இரு
வீட்டாறிலும் தக்வாவும் நியாய உணர்வும் உள்ள பெரியவர்களை நடுவராக வைப்பது.
وَاِنْ
خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا
مِّنْ اَهْلِهَا ۚ اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ
اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا
"அவ்விருவருக்குடையே பிளவு
ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் பயந்தால், ஆணின்
குடும்பத்திலிருந்து ஒரு மத்தியஸ்தரையும், பெண்ணின்
குடும்பத்திலிருந்து ஒரு மத்தியஸ்தரையும் அனுப்புங்கள். அவ்விருவரும்
சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான்." குர்ஆன்
வசனம் (4:35):
8. 'தவக்குல்'
& துஆ (இறைவனிடம் பொறுப்படைத்தல்)
தக்வாவுடன் முயற்சி செய்துவிட்டு, முடிவை அல்லாஹ்விடம் விட்டு பிரார்த்தனை செய்வது. தக்வா உள்ளவருக்கு
அல்லாஹ் நிச்சயமாக ஒரு வழியைக் காட்டுவான்.
ؕ وَمَنْ
یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مَخْرَجًا -_ وَّیَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ
"எவர் அல்லாஹ்வுக்கு
அஞ்சி வாழ்கிறாரோ (தக்வா கொள்கிறாரோ), அவருக்கு அவன்
ஒரு வழியை உண்டாக்குவான். மேலும், அவர் எதிர்பாராத விதத்தில்
அவருக்கு வாழ்வாதாரமளிப்பான்." குர்ஆன்
வசனம் (65:2-3):
رَبَّنَا
هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا
لِلْمُتَّقِیْنَ اِمَامًا
"எங்கள் இறைவா! எங்கள் மனைவியர்
மூலமாகவும், எங்கள் பிள்ளைகள் மூலமாகவும் எங்களுக்குக் கண்
குளிர்ச்சியைத் தருவாயாக! பயபக்தியுடையவர்களுக்கு (தக்வா உள்ளவர்களுக்கு)
எங்களை வழிகாட்டியாகவும் ஆக்குவாயாக!" குர்ஆன்
பிரார்த்தனை (25:74):
💡 சுருக்கம்:
1. தக்வா ➔ (அல்லாஹ்வின் அச்சத்துடன் தொடங்குதல்)
2.குறைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
3அன்பும்
இரக்கமும் ➔ (உறவைப் பேணுதல்)
4பெருந்தன்மை
(இஹ்சான்) ➔ (குறைகளைப் பொறுத்தல்)
5.அன்பான அறிவுரை ➔ (பேசித் தீர்த்தல்)
6.சமாதானம்
(ஸுல்ஹ்) ➔ (விட்டுக்கொடுத்தல்)
7.நேர்மையான
நடுவர் ➔ (குடும்பப் பெரியோர்களின் தலையீடு)
8.தவக்குல்
& துஆ ➔ (இறைவனிடம் பொறுப்பளித்தல்)
சமுதாயத்திற்கான
அவசர ஆலோசனைகளும் முடிவுரையும்
அன்பான
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த அவல நிலை மாற நமது சமுதாயத்திலும், மஹல்லாக்களிலும் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வர
வேண்டும்:
1.
திருமணத்திற்கு
முந்தைய ஆலோசனை (Pre-Marital Counseling): நிக்காஹ் செய்வதற்கு முன் தம்பதியருக்கு கணவன், மனைவியின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்ன என்பதை மார்க்க ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கற்றுத்தர வேண்டும்.
2.
ஜமாஅத்துகளின்
பங்கு: குடும்பப் பிரச்சினைகள்
வரும்போது ஜமாஅத் நிர்வாகிகள் வெறும் தலாக் சான்றிதழ் வழங்கும் இடமாக இல்லாமல், தம்பதியரைச் சேர்த்து வைக்கும் கவுன்சிலிங் மையமாகச் செயல்பட வேண்டும்.
3.
பெரியவர்களின்
முதிர்ச்சி: பிள்ளைகளின் குடும்ப
வாழ்க்கையில் தேவையின்றி தலையிடுவதைத் தவிர்த்து, கணவன்-மனைவிக்குள்
இருக்கும் மன்னிக்கும் குணத்தை வளர்க்க பெரியவர்கள் முன்வர வேண்டும்.
துஆ
(பிரார்த்தனை)
யா அல்லாஹ்!
எங்கள் குடும்பங்களில் உனது பரக்கத்தையும் நிம்மதியையும் பொழிவாயாக. கணவன்-மனைவி
இடையே அன்பையும் கருணையையும் ஏற்படுத்துவாயாக. பிரிந்திருக்கும் தம்பதியினரைச்
சேர்த்து வைப்பாயாக. எங்கள் சமுதாய இளைஞர்களுக்கு நற்புத்தியையும், சகிப்புத்தன்மையையும் (ஸப்ரையும்) தந்தருள்வானாக! ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.
l
கருத்துகள்
கருத்துரையிடுக